டிஎன்பிஎஸ்சி மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்.. இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண்
சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வில் நடந்த முறைகேடு பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ்(39), எரிசக்தித் துறை அலுவலக உதவியாளர் திருக்குமரன்(35), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடைத்தரகர்கள்
இடைத்தரகர்களாக செயல்பட்ட சென்னை ஆவடியை சேர்ந்த வெங்கட்ரமணன், தேனிமாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்த பாலசுந்தர்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். இதேபோல் இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்து முதல் நூறுஇடங்களுக்குள் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன், கடலூரை சேர்ந்த ராஜசேகர், சென்னை ஆவடியை சேர்ந்த காலேஷா, திருவல்லிகேணியை சேர்ந்த நிதீஷ்குமார், ராணிப்பேட்டையை சேர்ந்த கார்த்தி, திருவள்ளூரை சேர்ந்த வினோத்குமார், கடலூரை சேர்ந்த சீனிவாசன், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

எனக்கு தெரியாது
இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் காவலர் சித்தாண்டி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் அரசு வேலை வாங்கி தரும் ஜெயக்குமாருக்கு தான் இடைத்தரகராக மட்டுமே செயல்பட்டதாகவும் அவருக்குத்தான் முழு விவரம் தெரியும்என்றும் கூறினார்.எத்தனை லட்சங்கள் கைமாறியது. யார் யார் என்ற விவரம் தெரியாது என்றும் கூறினார்.

நீதிமன்றத்தில் சரண்
இந்நிலையில் பல நாட்களாக தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகப்பேர் ஜெயக்குமார் இன்று காலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஜெயக்குமார் இருக்கும் இடத்தை கூறுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி போலீஸார் நோட்டீஸ் ஒட்டியிருந்தனர் . இவர் சென்னை அண்ணாநகரில் முக்கிய இடத்திற்கு வரசொல்லி பல லட்சங்களை வசூலித்து பலருக்கு வேலை வாங்கி கொடுத்தாக புகார் உள்ளது. எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்தார் என்பது பெரும் புதிராக உள்ளது.

திருப்பம் வரலாம்
முன்னதாக இடைத்தரகர் ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அண்மையில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பென்டிரைவ், செல்போன் உள்பட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இடைத்தரகர் ஜெயக்குமார் தான் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்து 100க்கணக்கானோருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் இவரை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது- இப்போது ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருப்பதால் இனி விசாரணை தீவிரம் அடையும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications