கிளாம்பாக்கம் ஹேப்பி, கோயம்பேடும் மகிழ்ச்சி.. அடுத்த இரண்டு நாள்.. டிஎன்எஸ்டிசி அசத்தல் முடிவு
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டில் இருந்து வார இறுதிநாட்களையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 880 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல வேண்டும் என்றால்,அல்லது கோவை, திருப்பூர்,மதுரை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி,தஞ்சாவூர், சேலம், பெங்களூர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் சராசரியாக வார இறுதி நாட்களில் 1000 முதல் 2000க்கு மேல் இருக்கிறது. அதேநேரம் அரசு பேருந்துகளில் 500 முதல் 600 வரை தான் கட்டணம் இருக்கிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பலர் வார இறுதி நாட்களில் சொந்த ஊர் செல்ல ஆம்னி பேருந்துகளுக்கு பதில் அரசு பேருந்துகளையே விரும்புகிறார்கள்.

அந்த வகையில் ஜூலை 27, 28ம் தேதி வார இறுதி நாட்கள் என்பதால், சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள்,. . இதைக் கருத்தில் கொண்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 880 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும் போது, "ஜூலை 27, 28 வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். . இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் (ஜூலை 26, 27) 550 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதேபோல் சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஒட்டு மொத்தமாக சென்னை, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஒட்டுமொத்தமாக 880 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
இப்பேருந்துகளில் பயணிக்க www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்துகொள்ள தேவையான முன்னேற்பாடுகளும் செய்துள்ளோம். சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வார இறுதி நாட்களில் பயணிக்க சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை முன்பதிவு செய்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications