இறங்கி அடிக்கிறாரா டிடிவி தினகரன்.. குழம்பி பார்க்கும் அதிமுக? கையை பிசையும் பாஜக.. என்னாச்சு
சென்னை: தமிழக அரசியலில் அதிமுக மற்றும் அமமுக இடையிலான உறவு வெளிப்படையாக இணைந்திருந்தாலும், உள்ளுக்குள் தயக்கமும் எச்சரிக்கையும் நிறைந்ததாகவே இருந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.. கருத்து வேறுபாடுகளை மறந்து தேர்தல் வெற்றிக்காக இணைந்து செயல்படுவோம் என்று இரு தரப்பும் சொல்லி வந்தாலும், தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் கவனத்துடன் அணுகி வருவதாகவும் கூறப்படுகிறது.. இந்த சூழலில், அதிமுக மற்றும் அமமுக இடையிலான உண்மையான உறவு குறித்து பல்வேறு கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன..
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக முக்கிய கட்சியாக உள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஒரே கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்..

கடந்த காலங்களில் இருவரும் கடுமையான அரசியல் விமர்சனங்களை பரிமாறிக் கொண்டிருந்தாலும், பிரதமர் பங்கேற்ற மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் தோன்றி, தங்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுகள் என வெளிப்படுத்தினர்.. இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்தது..
அதிமுக வாக்கு பிளவு
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தென் மாவட்டங்களில் தினகரனுக்கு இருந்த ஆதரவு காரணமாக, அதிமுக மற்றும் அமமுக தனித்தனியாக போட்டியிட்ட தேர்தல்களில் வாக்குகள் பிளவுபட்டு, அதனால் திமுகக்கு அரசியல் ஆதாயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது..
இந்த அனுபவத்தை கருத்தில் கொண்டு, வாக்குப்பிளவைத் தவிர்க்கும் நோக்கில் தற்போதைய கூட்டணி அமைக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.. இருப்பினும், இரு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே முழுமையான ஒற்றுமை இன்னும் உருவாகவில்லை என்று கூறப்படுகிறது..
சில அதிமுக நிர்வாகிகள் தினகரனுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, கட்சிக்குள் ஒழுங்கை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது..
தஞ்சாவூர் விழா
மேலும், தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமமுக நிர்வாகிகள் பங்கேற்காதது மற்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்ற நிலைப்பாடு எடுத்ததாக கூறப்படும் சம்பவங்கள், கூட்டணியின் நடைமுறை ஒற்றுமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களில் அமமுகவின் பங்கேற்பு குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.. இதற்கிடையில், கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் நிலையில், "பாஜகவிடம் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்" என்று தினகரன் தெரிவித்தது, கூட்டணிக்குள் உள்ள அரசியல் சமநிலையை வெளிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்..
தொண்டர்கள் குழப்பம்
சமீபத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை இரு கட்சிகளும் தனித்தனியாகக் கொண்டாடியது, தொண்டர்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது..
இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள், "தேர்தல் நோக்கில் மட்டுமே இந்த ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே உறவின் எதிர்காலம் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுவதால், இந்த கூட்டணியின் நீடிப்பு மற்றும் செயல்திறன் குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து எதிர்பார்ப்பும், சந்தேகமும் நிலவி வருகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications