பாமக இளைஞரணித் தலைவர் பதவி! அன்புமணி இடத்திற்கு யார்?தைலாபுரம் தோட்டத்தில் தீவிர ஆலோசனை!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் இளைஞரணித் தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் அந்தப் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்ற ஆலோசனை தைலாபுரம் தோட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.
இது நாள் வரை அன்புமணி ராமதாஸ் வகித்த பதவி என்பதால் பாமக இளைஞரணி தலைவர் பதவிக்கு பார்த்து பார்த்து ஆள் தேர்வு செய்யும் படலம் தொடங்கியிருக்கிறது.
பாமக மாவட்டச் செயலாளர்களுடன் ராமதாஸ் கலந்தாய்வு நடத்திய பிறகு இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக இளைஞரணி
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக புரோமோஷன் ஆகியுள்ள அன்புமணி ராமதாஸ், இதுநாள் வரை அக்கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்தார். இந்நிலையில் இப்போது காலியாகவுள்ள அந்தப் பதவியிடத்துக்கு புதிய நபர் ஒருவரை தேர்வு செய்யும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. தைலாபுரம் தோட்டத்தில் இது தொடர்பான டிஸ்கஷன் நடந்து வருகிறது. அதில் மாம்பழ நகரை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரது பெயரும் பரிசீலனையில் உள்ளதாம்.

அன்புமணிக்கு ஒத்திசைந்து
அன்புமணி ராமதாஸின் வேகத்திற்கு ஈடு கொடுத்து, அவரது எண்ணவோட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்து, கட்சி வளர்ச்சிப் பணிகளில் தீவிரம் காட்டக் கூடிய ஒருவரை பாமக இளைஞரணித் தலைவராக்க விரும்புகிறாராம் ராமதாஸ். இதனால் தான் இளைஞரணித் தலைவர் நியமனத்தில் அவசரம் காட்டாமல் பொறுமையாக ஆரய்ந்து வருகிறாராம். இதனிடையே வரும் ஞயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பாமக மாவட்டச் செயலாளர்களை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்திருக்கிறார் ராமதாஸ்.

முக்கிய ஆலோசனை
அந்தக் கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் நியமனம், அன்புமணி ராமதாஸை வைத்து கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்துவது பற்றியெல்லாம் ஆலோசிக்க உள்ளாராம். இனி வரும் நாட்களில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை அதிகம் நடத்தும் திட்டத்தில் உள்ள அன்புமணி, அந்தக் கூட்டங்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் இளைஞர் பட்டாளத்தை பெருமளவில் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் பகீரத முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மது விலக்கு
அன்புமணி ராமதாஸ் பாமக இளைஞரணித் தலைவராக இருந்த போது மதுவிலக்குக்கு எதிராக அவர் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் இன்றளவும் பேசத்தக்க வகையில் உள்ளது. இதனால் தன்னை காட்டிலும் இளைஞரணித் தலைவராக வரவிருப்பவர் இன்னும் வீரியமாக கட்சிப்பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பது புதிய இளைஞரணித் தலைவர் தேர்வுக்கான அன்புமணியின் நிபந்தனையாம்.












Click it and Unblock the Notifications