தமிழகத்தில் அதிர்ச்சி.. ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா .. சென்னை மோசமான பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று 1562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 9வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று 1562 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்குள் மட்டும் 1520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 142 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் 1149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23298 ஆக உயர்ந்துள்ளது.
28 மாவட்டங்களில் கொரோனா பரவல்.. சென்னை, செங்கல்பட்டு, வேலூரில் கிடுகிடு.. முழு லிஸ்ட்
கொரோனா பாதிப்பு
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 134 பேர், திருவள்ளூரில் 57 பேர், காஞ்சிபுரத்தில் 18 பேர், வேலூரில் 32 பேர், தூத்துக்குடியில் 26 பேர், திருவண்ணாமலையில் 11 பேர், திண்டுக்கல்லில் 9 பேர், கள்ளக்குறிச்சியில் 9 பேர், கன்னியாகுமரியில் 7 பேர், மதுரையில் 5 பேர, நாகப்பட்டினத்தில் 5 பேர், புதுக்கோட்டையில் 3 பேர், ராமநாதபுரத்தில் 6 பேர், ராணிப்பேட்டையில் 6 பேர், சேலத்தில் 3 பேர், சிவகங்கையில் 7 பேர், தென்காசியில் 3 பேர், தஞ்சாவூரில் 4 பேர், தேனியில் 2 பேர், திருவாரூரில் 3பேர், திருநெல்வேலியில் 3 பேர், விழுப்புரத்தில் 3 பேர், விருதுநகரில் 4 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குணம் அடைந்தவர்கள்
தமிழகத்தில் இன்று மட்டும் 528 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஜூன் 8ம் தேதி (இன்று) நிலவரப்படி தமிழகத்தில் 17,527 பேர் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 15,413 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 11,817 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மிக அதிகமான சோதனை
ஜூன் 8ம் தேதியான இன்று மட்டும் 14,454 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 6,07,952 சாம்பிள்கள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனிநபர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் இதுவரை இன்று மட்டும் 15,671 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 5,80,768 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனாவால் அதிகரித்த மரணம்
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 17பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். திருவள்ளூரில் 2 பேர் காஞ்சிபுரத்தில் ஒருவர், விழுப்புரத்தில் ஒருவர், ராணிப்பேட்டையில் ஒருவர் என. கொரோனாவால் இன்று 17 பேர் இறந்துள்ளனர். இதில் 14 அரசு மருத்துவமனையிலும், 3 தனியார் மருத்துவமனையில் ஏற்பட்டது. இதுவரை 286 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்த 17 பேரில் திருவள்ளூரைச் சேர்ந்த 22வயது ஆண் கொரோனாவுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். நேற்று 20 வயது கர்ப்பிணி பலியான நிலையில் இன்று ஒரு இளம் வயது நபர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 15 பேர் 50 வயதை கடந்தவர்கள்., ஒருவருக்கு 49 வயது ஆகும்.
ஆண் பெண் விவரம்
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1562 பேரில் 941 பேர் ஆண்கள், 621 பேர் பெண்கள் ஆவர், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 33,229
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20,575 பேர் ஆண்கள், 12,637 பேர் பெண்கள், 17 பேர் திருநங்கைகள் ஆவர். ஜூன் 8ம் தேதி நிலவரப்படி 15,413 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் 77 மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 44 அரசு மருத்துவமனையில் உள்ளது. 33 தனியார் மருத்துவமனையில் உள்ளது.