இந்த ரூட்டில் போக பிளானா? சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் சொந்த போக்குவரத்தை விட பொது போக்குவரத்துகளான பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் மக்கள் அலுப்பின்றி இந்த ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை டூ வேளச்சேரி, சென்னை கடற்கரை டூ அரக்கோணம், சென்னை கடற்கரை டூ திருமால்பூர், சென்னை கடற்கரை டூ திருத்தணி உள்ளிட்ட ரயில்கள் மிக முக்கியமானதாகும்.
இந்த நிலையில், தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மார்ச் 3 சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல் தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் 25-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இன்று மார்ச் 3 காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைத்து பயணிகளும் தங்களின் பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications