தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..பட்ஜெட்டில் நிதியமைச்சர் சொன்ன குட்நியூஸ்
தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத்தலைவிகளின் மனம் குளிரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்றைய தினம் மகளிருக்கு ரூபாய் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதற்கான நாள் குறித்து அறிவித்துள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று கூறி குடும்பத்தலைவிகளின் மனங்களை குளிர வைத்துள்ளார் நிதியமைச்சர்.
சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சில நாட்கள் பேரவை நடைபெற்றது. இந்நிலையில், தமிழக அரசின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றது. அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் காகிதமில்லா பட்ஜெட்டாகவும் அது அமைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி 2022-23 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த மூன்றாவது இ.பட்ஜெட் ஆகும்.

2023 பட்ஜெட் தாக்கல்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2023 மார்ச் 20ல் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டசபைக்கு அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் காலையில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

மகளிருக்கு மாதம் ரூ.1000
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பு கடந்த 2ஆண்டுகாலமாக வெளியிடவில்லை. தமிழ்நாடு கஜானாவை அதிமுக காலி செய்துவிட்டது. அதை மீட்டு எடுக்க தாமதம் ஆகிவிட்டது என்று கூறப்பட்டது.

மகளிர் மனம் குளிரும் அறிவிப்பு
இந்த நிலையில் பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக கடந்த மாதம் ஈரோடு தேர்தல் பிரச்சார களத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25800 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நீண்ட எதிர்பார்ப்பான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தேர்தல் வாக்குறுதி
சட்டசபையில் உரையை வாசித்த தியாகராஜன், சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தை - சரிநிகர் சமமாக உயர்த்த திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது திராவிட மாடல் அரசு. மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம்.

சொன்னதை செய்யும் அரசு
சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்ற இலக்கின்படி செயல்பட்டு வருபவர்கள் மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவீர்கள்.மக்களை தேடி மருத்துவம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்றவை தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை. இத்தகைய புதுமையான திட்டங்களை செயல்படுத்தியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகள்
அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.மத்திய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும்
1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்.

எப்போது முதல் கிடைக்கும்?
கருணாநிதி அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில்,செப்டம்பர் மாதத்தில், அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications