தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை : தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு இதுவரை 82 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பத்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு எமிஸ் தளத்தில் விண்ணப்பப் பதிவு மேற்கொள்வதற்கு இன்று (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2024-25ஆம் கல்வியாண்டில் பணியிட மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணிப்பிப்பது கடந்த மே 13ஆம் தேதி தொடங்கியது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்து இருந்தது.
ஆசிரியர்கள், தங்களது எமிஸ் - ஐடி மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்து பள்ளி கல்வி துறை.
தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து உள்ள ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்ந்துள்ள மாறுதல் விண்ணப்பங்களை, உயர்நிலை, மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் ஆசிரியர்களால் ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், நிலுவையின்றி உடனடியாக கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட வேண்டும் என்றும், அலுவலர்களால் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு, முழுமையான வடிவில் பிரதி எடுத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் பள்ளி கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
பொது மாறுதல் கலந்தாய்விற்காக இன்று வரை (மே 25) விண்ணப்பம் செய்த ஆசிரியர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும். எனவே, எவ்வித விடுதலுமின்றி மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து, உரிய அலுவலர்களால் நாள்தோறும் நிலுவையில்லாமல் ஏற்பளித்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மே 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலும் தொடக்கக் கல்வி இயக்க நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், இடைநிலை ஆசிரியர்கள் 9 ஆயிரத்து 613 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 5 ஆயிரத்து 208 பேரும், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்கள் 2 ஆயிரத்து 745 பேரும், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 463 பேரும் என 18 ஆயிரத்து 29 ஆசிரியர்களால் விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டிருந்தது.
இதேபோல் பள்ளிக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 14 ஆயிரத்து 854 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 10 ஆயிரத்து 751 பேரும், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 659 பேரும், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 621 பேரும், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் 516 பேரும் என 27 ஆயிரத்து 401 ஆசிரியர்களால் விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டிருந்தார்கள்.
மேலும், தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் 5,500, பட்டதாரி ஆசிரியர்கள் 1,100, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் 1,200, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 715 என மொத்தம் 8,515 காலிப் பணியிடங்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் சுமார் 5,000 காலிப் பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தற்போது வரை தொடக்கக்கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்களுக்கு என 35 ஆயிரத்து 266 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள், மற்றும் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல்களுக்கு 46 ஆயிரத்து 556 ஆசிரியர்களும் என மொத்தம் 81 ஆயிரத்து 822 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு எமிஸ் தளத்தில் விண்ணப்பப் பதிவு மேற்கொள்வதற்கு இன்று (சனிக்கிழமை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கலந்தாய்வில் பங்கேற்க பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்து இருக்கவேண்டும் என்ற நிபந்தனை விலக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications