செவிலியர்கள் தினம்.. இன்னுயிரை பணயம் வைத்து கொரோனா பணியில் "பிளோரன்ஸ் நைட்டிங்கேல்களுக்கு" சல்யூட்!
சென்னை: உலகமே சமூக இடைவெளியை வலியுறுத்தி வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு தாய் போல் சிகிச்சை அளிக்கும் செவிலியர்களை தலை வணங்கி வாழ்த்துகளை தெரிவிப்போம்.
Recommended Video
கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது இரவு பகல் பாராமல் தன் குடும்பத்தை மறந்து மருத்துவமனைகளில் தாயுள்ளத்துடன் சிகிச்சை அளிப்பவர்கள்தான் செவிலியர்கள். இவர்களை முன்பெல்லாம் செவிலியத் தாய் என்றே அழைக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் அந்த "தாய்களை" போற்றுவதற்காக ஆண்டுதோறும் உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 10 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட அடுத்த இரு தினங்களில் உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுவது எத்தனை பொருத்தமான ஒன்று.

200ஆவது பிறந்த தினம்
விளக்கேந்திய சீமாட்டி (Lady of the Lamp) என அழைக்கப்பட்டவரும் போரில் காயப்பட்டவர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவருமான பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தைதான் ஒவ்வொரு ஆண்டும் உலக செவிலியர்கள் தினமாக கொண்டாடுகிறோம். இன்று அவரது 200-ஆவது பிறந்த தினம்.

படைவீரர்கள்
விக்டோரியா அரசிக்கு அடுத்தப்படியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக வலம் வந்த பிளோரன்ஸ் நைட்டிங்கேல், விக்டோரிய அரசியின் வேண்டுகோளை ஏற்று படைவீரர்களின் உடல் நலன் குறித்து அரசு ஆணைக் குழுவை அமைப்பதிலும் அந்த ஆணை குழுவிற்குத் தேவையான அறிக்கைகளை ஆயத்தப்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டார்.

அருங்காட்சியகம்
நாடே இன்று கொரோனா வைரஸின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள், சுத்தமாக கைகளை கழுவுங்கள் என தினம் தினம் வலியுறுத்தி வரும் நிலையில் இதை 100 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னவர் பிளோரன்ஸ் நைட்டிங்கேல் என்பதை லண்டனில் உள்ள அவரது அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்கள் பறைசாற்றுகின்றன.

சிக்கல்
இவர் மருத்துவம் குறித்த பல புத்தகங்களை எழுதியுள்ளார். செயிண்ட் தாமஸ் மருத்துவமனை மற்றும் செவிலியர்களுக்கான நைட்டிங்கேல் பயிற்சிப் பள்ளியை 1860-ஆம் ஆண்டு நிருவி ஆயிரக்கணக்கான செவிலியர்களை உருவாக்கினார். இவருக்கு 84 ஆவது வயதில் இங்கிலாந்து நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் மெரிட் எனும் விருது வழங்கப்பட்டது. வழக்கமாக லண்டனில் உள்ள வென்ஸ்மிஸ்டர் அபேயில் உள்ள செவிலியர் மாளிகையில் செவிலியர் தினத்தன்று விளக்குகள் ஏற்றப்படுவது. ஆனால் இந்த முறை கொரோனா பாதிப்பால் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒன் இந்தியாவின் வாழ்த்து
இந்த செவிலியர் தினத்தில் பக்கத்தில் சென்றாலே தொற்றிக் கொள்ளும் என கூறி உலக மக்கள் எல்லாம் சமூக இடைவெளியை கடைப்பிடித்தாலும் தங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒவ்வொரு பிளோரன்ஸ் நைட்டிங்கேல்களுக்கும் தலைவணங்கி வாழ்த்துகளை தெரிவிக்கிறது நமது தமிழ் ஒன் இந்தியா. செவிலியர்களை போற்றுவோம்!












Click it and Unblock the Notifications