கொரோனாவால் வந்த வினை.. சென்னையில் தெருவுக்கு தெரு To-let போர்டுகள்.. புறநகருக்கு இடம்பெயரும் மக்கள்
சென்னை: வெளிமாவட்டங்களில் இருந்து சென்னையில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்தவர்கள், படித்தவர்கள் கொரோனா பீதியால் சென்னையை விட்டு சொந்த ஊர் திரும்பியதால் பெரும்பாலான வீடுகள் காலியாக உள்ளன. சென்னையில் நிறைய பகுதிகளில் உள்ள வீடுகளில் டூ லெட் போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்ற பெயருக்கேற்ப இங்கு வந்தால் ஒரு பெட்டிக் கடை வைத்தாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட மக்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.
பொதுவாக தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் பனியன் தொழிற்சாலை, ஸ்பின்னிங் மில், பல ஃபேக்டரிகள் என பல்வேறு தொழில்கள் உள்ளன. இங்கு குறைந்த சம்பளத்தில் பெருவாரியான மக்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால் சென்னையை எடுத்துக் கொண்டால் இங்கு பெரிய தொழில் முதல் சிறிய தொழில் வரை அனைத்து புழங்கக் கூடிய இடமாகும்.

சென்னை
பெரிய பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முதல் சிறிய பெட்டிக் கடை வரை அனைத்திலும் மக்கள் ஏதாவது ஒரு வேலையைப் பார்த்து கொண்டு தனது வயிற்றையும் தன்னை நம்பியிருக்கும் அன்புக்குரியவர்களின் வயிற்றையும் கழுவி வந்தனர். என்னதான் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் என பெரிய நகரங்கள் இருந்தாலும் சென்னையை காட்டிலும் அங்கு எல்லாம் காஸ்ட் ஆஃப் லிவிங் மிகவும் அதிகம்.

சென்னை
எனவே வேலைத் தேடுவோரின் சாய்ஸ் சென்னையாகவே இருக்கிறது. இது போல் வெளிமாநிலத்தினர், வெளி மாவட்டத்தினர் சென்னையில் செட்டில் ஆகினர். ஆனால் கொரோனா ஊரடங்கால் வேலையிழப்பு, சம்பள குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் சென்னையிலிருந்து பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.

நிச்சயம்
அது போல் ஐடி ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிய நிறுவனங்கள் அனுமதி கொடுத்துவிட்டதால் அவர்களும் தற்போது சொந்த ஊர்களில் வசித்து வருகிறார்கள். இந்த சூழல் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. எனினும் இது நிச்சயம் இந்த ஆண்டு வரை நீடிக்கும் என்பதால் பெரும்பாலானோர் தேவையின்றி வாடகை கொடுக்காமல் வீடுகளை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு குடியேறிவிட்டனர்.

வாடகை
அது போல் அதிக வாடகை, வருமானமின்மை உள்ளிட்ட காரணங்களால் ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை புறநகர் பகுதிகளில் அமைக்கின்றன. இதனால் வீடுகள் முதல் கமர்சியல் காம்ப்ளஸ்கள் வரை டூலெட் போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. முன்பெல்லாம் சென்னையில் வீடு கிடைப்பதே கடினம். தற்போது கூவி கூவி அழைக்காத குறையாக தெருவுக்கு தெரு டூலெட் போர்டுகள் தொங்குகின்றன.

பணி நிமித்தம்
சென்னையில் கொரோனா பீதி குறைந்தாலும் கூட பணி நிமித்தமாக வருவோர் தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வீடு வாடகைக்கு பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் வாடகை குறைவாக கிடைக்கும் பகுதிகளில் குடியேற விரும்புகிறார்கள். முன்பெல்லாம் ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையம், மார்க்கெட் இதெல்லாம் பக்கமாக இருக்கும் இடத்தில் குடியேறினர்.

ரேஞ்ஜே வேற
ஆனால் தற்போது கொரோனா அந்த நிலையை மாற்றி போட்டுவிட்டது. எங்கு வாடகை குறைவாக இருக்கிறது என பார்க்கிறார்கள். அது முட்டு சந்தாக இருந்தாலும் தேவலை என்ற ரேஞ்சுக்கு வந்துவிட்டது. வீடுகளை திறந்து வைத்துக் கொண்டு யாராவது வரமாட்டார்களா என உரிமையாளர்கள் காத்துக் கிடக்கிறார்கள், ஆனால் குடியேற ஆட்கள்தான் இல்லை. என்று மாறும் இந்த நிலை?












Click it and Unblock the Notifications