காலையிலேயே வந்த நல்ல செய்தி! சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு வாபஸ்.. திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்
சென்னை: இன்று ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையே விரைவாகப் பயணிக்கவும் எளிமையாகச் சரக்குகளை எடுத்துச் செல்லவும் சுங்கச் சாலைகள் இருக்கிறது. இவை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்ல உதவும்.

அதேநேரம் இந்த சாலைகளில் பயணிக்கத் தனியாகச் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். சாலை வரியை அனைவரும் செலுத்தும் போது ஏன் தனியாகச் சுங்க கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பதே இங்கே பலரது கேள்வியாக இருந்து வருகிறது.
சுங்கச்சாவடிகள்: அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாகச் சுங்கச்சாவடிகள் இருப்பதாக மக்கள் நீண்ட காலமாக அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதேநேரம் திமுக உள்ளிட்ட கட்சிகள் நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்தச் சூழலில் நாடு முழுக்க சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இருப்பினும், இன்று காலை சுங்கச்சாவடிகளில் சென்ற வாகனங்களிடம் பழைய கட்டமே வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கேட்ட போது புதிய கட்டணம் அமல்படுத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தனர்.
பழைய கட்டணமே வசூல்: நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே புதிய கட்டணங்கள் லோக்சபா தேர்தலுக்குப் பிறகு உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தல் நிறைவடையும் வரை, அதாவது ஜூன் மாதம் வரை இப்போது இருக்கும் கட்டணமே வசூலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
சுங்கச்சாவடிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் உயர்த்தப்படும். குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதியும், மற்ற சுங்கச்சாவடிகளில் செப் மாதமும் உயர்த்தப்படும். அதன்படியே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 5% முதல் 10% வரை இந்த கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருந்தது.
தமிழக சுங்கச்சாவடிகள்: தமிழகத்தில் மொத்தம் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு இருக்கும் எனக் கூறப்பட்டது. இதற்கு நாடு முழுக்க வாகன ஓட்டுநர்கள், லாரிகள் உரிமையாளர் சங்கம் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். மேலும், சுங்கச்சாவடிகளை முற்றிலும் நீக்க வேண்டும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்தச் சூழலில் இன்று அறிவிக்கப்பட்டு இருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வரவில்லை. நேற்றிரவு இது தொடர்பாக ஒரு அறிவிக்கை வந்துள்ளது. அதில் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்றும் பழைய கட்டணத்தையே வசூலிக்குமாறும் கூறப்பட்டு இருந்தது. ஜூன் மாத அறிவிப்பிற்குப் பிறகு புதிய கட்டணத்தை அமல்படுத்தலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது.
சுங்க கட்டணம் உயர்ந்து இருக்கும் என நினைத்துச் சென்ற வாகன ஓட்டிகளுக்கு இது மகிழ்ச்சியான ஒரு செய்தியாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications