சென்னை கோயம்பேட்டில் தக்காளியின் விலை வீழ்ச்சி.. ஆனாலும் மக்கள் அதிர்ச்சி.. ஏன் என்னாச்சு?
சென்னை: சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.40 க்கு விற்பனையாகிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய மார்க்கெட் என அறியப்படுவது கோயம்பேடு மார்க்கெட் ஆகும். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
பூக்கடை, பழக்கடை, காய்கடை என தனித்தனியே இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் தக்காளியின் விலை ரூ.190 ஐ தொட்டது. சில்லறை விற்பனையில் கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையானது.

இதனால் தக்காளியை வாங்க முடியாமல் மக்கள் திணறினர். ஒரு முறை கிலோ 170 க்கு தக்காளி விற்கப்பட்ட போது வாடிக்கையாளர் ஒருவர் 100 கிராம் தக்காளி கேட்டார். சரி 2 அல்லது 3 வரும் என எதிர்பார்த்தார். அதை 3 நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாமே என நினைத்தார்.
ஆனால் 100 கிராமுக்கு ஒரே ஒரு தக்காளி நின்றது. அதை பில் போட்டு வாங்கிக் கொண்டு போனதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அது போல் தக்காளி இல்லாமல் என்னென்ன சாதம் செய்யலாம் என்பதை இணையதளத்தில் போட்டு தேடினர். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கிலோ 60 க்கு தக்காளி விற்பனையானது.
ஆனால் அந்த தக்காளியை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் தக்காளி விலை எப்போது குறையும் என காத்திருந்தனர். கிலோவுக்கு 10, 20 என குறைந்து ஒரு கட்டத்தில் ரூ.100 க்கு விற்பனையானது, பிறகு 90, 80 என கிலோ தக்காளி விற்பனையானது. இந்த நிலையில் நேற்று கோயம்பேட்டில் கிலோ ரூ.50 க்கு நாட்டு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் ரூ.10 குறைந்து கிலோ தக்காளி ரூ.40 க்கு விற்பனையாகி வருகிறது. பெங்களூர் தக்காளியின் விலை ரூ.60 க்கு விற்பனையாகிறது. அது போல் பொடி தக்காளி கிலோ 20 முதல் 30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் தற்போது ஆங்காங்கே மழை பெய்வதால் விலை குறைந்திருக்கும் போதே தக்காளியை வாங்கி குவிக்கிறார்கள். வெங்காயத்தின் விலை ரூ.35 ஆக விற்பனையாகிறது. தக்காளி விலை குறைந்து வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 60 க்கு விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications