சிறுவன் கடத்தல் வழக்கு.. கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை தொடங்கியது!
சென்னை: காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில், ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஜெயராம் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் களப்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், சமீபத்தில் தேனியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து பதிவு திருமணம் செய்திருந்தார். பெண் வீட்டார் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், அவர்களுக்கு தெரியாமல் பதிவு திருமணத்தை இவர் செய்திருந்தார். இதனையடுத்து சிலர் இவரது தம்பியான 18 வயது சிறுவனை கடத்தியுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதாவது, திருவள்ளூர் காவல் நிலையத்தில் இளைஞரின் தாய் இந்த புகாரை கொடுத்திருந்தார். புகாரில், தனது மூத்த மகன் ஒரு பெண்ணை, அந்த பெண்ணின் குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் அந்த பெண்ணின் குடும்பத்தினர் சிலருடன் வந்து தனது மூத்த மகனை வீடு புகுந்து தேடியதாகவும் கூறியிருந்தார்.
மூத்த மகனும், அவரது மனைவியும் தலைமறைவாகிவிட்டதால், அந்த கும்பல் தனது இளைய மகனான 18 வயது சிறுவனை கடத்திச் சென்றதாகவும் லட்சுமி குற்றம் சாட்டியிருந்தார். பின்னர், இளைய மகன் காயங்களுடன் ஒரு ஓட்டல் அருகே இறக்கிவிடப்பட்டதாகவும் அவர் கூறினார். இளைய மகன் ஏ.டி.ஜி.பி-யின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் இறக்கிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த புகாரில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி ஆட்கள்தான் வீடு புகுந்து இளைய மகனை கடத்தியதாக அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து ஜெகன்மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக பெண்ணின் தந்தை உட்பட 5 பேர் கைதான நிலையில், விசாரணைக்காக ஜெகன்மூர்த்தியும், ஏடிஜிபி ஜெயராமும் ஆஜராகமல் இருந்துள்ளனர். இதற்கிடையில் இவர்கள் இருவரையும் நீதிமன்றம் நேரில் ஆஜராக சொல்லியிருந்தது. இருவரும் ஆஜரான நிலையில், உடனடியாக ஏடிஜிபியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஜெயராம் போலீஸ் சீருடையில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை உடனடியாக தொடங்க உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், அவரை திருவலங்காடு காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்திருக்கின்றனர். அவரிடம் உடனடியாக விசாரணை தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி தமிழரசி நியமிக்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications