எடப்பாடி பழனிசாமிக்கு பலத்த வரவேற்பு.. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பூந்தமல்லி சாலை
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்ததால் பூந்தமல்லி- மதுரவாயல் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை பன்னீர் செல்வம் தரப்பு கடுமையாக எதிர்த்தது. அதிமுகவில் இரட்டை தலைமை நிலைப்பாடே சரி, அண்மையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்வு செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில் எதற்காக புதிய பதவி என்ற கேள்வியை எழுப்பினர்.

அசாதாரண சூழல்
கடந்த 10 நாட்களாக அதிமுகவில் அசாதாரண சூழல் நிலவியதை அடுத்து பொதுக்குழுவை ஒத்தி வைக்க பன்னீர் தரப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏற்கவில்லை. இதையடுத்து பொதுக்குழுவுக்கு அனுமதி தரக் கூடாது என கோரி ஆவடி காவல் துறைக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார்.

முயற்சி தோல்வி
ஆனால் அங்கும் அவரது முயற்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கிலாவது ஓபிஎஸ்ஸுக்கு வழி பிறக்கும் என எதிர்க்கொண்டிருந்த நிலையில் அங்கும் அவருக்கு சறுக்கலே ஏற்பட்டது. அதிமுக பொதுக் குழுவை கூட்ட தடை இல்லை, சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரவும் தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் நேற்று இரவு தீர்ப்பு வழங்கியது.

23 தீர்மானங்கள்
இதை பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. அப்போது பொதுக்குழுவை கூட்டலாம், ஆனால் பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு விதமான பிடிப்பை தந்தது.

போக்குவரத்து நெரிசல்
இதையடுத்து ஓபிஎஸ் தரப்பினர் வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் உற்சாகமாக கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் அமைந்தகரையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்ததால் பூந்தமல்லி- மதுரவாயல் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் அலுவலகம் செல்வோர் தவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications