சென்னை வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! ANPR கேமராவில் பதிவான வழக்குகள் ரத்து.. வெளியான புது அறிவிப்பு
சென்னை: புயல் மழை காரணமாக சென்னையில் கேமராக்கள் மூலம் பதிவான போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து போலீஸ் அறிவித்துள்ளது.
கடந்த 4ம் தேதியன்று ஒரே நாளில் 40 செ.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்திருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீதான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவே சென்னை முழுவதும் வெள்ள காடாக மாறியிருக்கிறது. மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆன பின்னரும் சென்னையில் சில பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியவில்லை.

குறிப்பாக வடசென்னையின் பட்டாளம், அம்மையம்மன், திருவொற்றியூர், எண்ணூர், மணலி, எர்ணாவூர் போன்ற பகுதிகளில் நீர் அப்படியே தேங்கி நிற்கிறது. எனவே மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றனர். பெரம்பூர், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நீர் வடிந்திருந்தாலும் மின் இணைப்பு இன்னும் சீராக கொடுக்கப்படவில்லை. எனவே ஆங்காங்கே மக்கள் போராட்டம் வெடித்திருக்கிறது.
வெள்ள பாதிப்பிலிருந்து தப்பிக்க மக்கள் கிடைத்த வண்டிகளில் ஏறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றிருக்கின்றனர். ஆனால் இந்த காட்சிகள் எல்லாம் போக்குவரத்து போலீசார் பொருத்தியிருந்த ANPR கேமராக்களில் பதிவாகியுள்ளது.
அதாவது விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் வாகன நெரிசல்களை குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் இந்த அதிநவீன கேமராக்களை பொருத்தியுள்ளனர். இது விதிகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து அதன் பதிவு எண்ணை பதிவு செய்யும். இந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியும் அபராதம் விதிக்கப்படும். இப்படியான நடவடிக்கைகள் மூலம் 2021-ஐ ஒப்பிடுகையில் 2022-ல் விபத்துகள் 11.84 சதவீதம் குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் விபத்து உயிரிழப்புகளும் 11.52 சதவீதம் குறைந்துள்ளதாக போக்குவரத்து போலீசார் கூறுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி முதல் இன்று வரை(டிச.8) இந்த கேமராக்களில் பதிவான அத்தனை வழக்குகளும் புயல் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
"சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 03.12.2023 முதல் 08.12.2023 வரை, வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்ட ANPR கேமராக்கள் மூலம் மொத்தம் 6,670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழையினைக் கருத்தில் கொண்டு, இந்த ஒரு முறை மட்டும் மேற்படி தேதிகளில் நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications