ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்த விபரீதம்.. இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
சென்னை: நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் தளத்தில் விபத்து ஏற்பட்டு 28 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஜெயிலர்'. ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்ணா, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

ஜெயிலர் - 2 படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, மோகன்லால், பவன் கல்யாண், பாலகிருஷ்ணா ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவிலும், சென்னை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூர் அருகே ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் ஜெயிலர் படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த படப்பிடிப்பு பணியில் பணிபுரியும் கார்த்திகேயன் (28) என்பவர் , மின் இணைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த கானத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரோதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கார்த்திகேயன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வீடு போல அமைக்கப்பட்ட செட்டில் இவர் மின் விசிறி மாட்டும்போது, மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷூட்டிங்கில் டெக்னிஷியன் பலியான சம்பவம் யூனிட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளுக்கு கால்ஷீட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவத்தால் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications