செங்கல்பட்டில் பயணிகள் திடீர் போராட்டம்..ஒரு மணி நேரம் தாமதமாக சென்ற நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்
சென்னை: மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தண்ணீர் வராததால் பயணிகள் அவதியடைந்தனர். அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ரயில் பயணிகள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நமது நாட்டில் தொலை தூர பயணங்களுக்கு மக்கள் அதிகம் ரயில் பயணத்தைத் தான் விரும்புகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் செல்லும் பயணிகளும் சிரமம் இன்றி ரயிலில் பயணம் செய்ய முடியும் என்பதால் ரயில் பயணத்தையே பலரும் விரும்புவார்கள். அதிலும் நீண்ட தூர பயணம் என்றால் பயணிகளின் முதல் விருப்ப தேர்வு ரயில்களாகத்தான் இருக்கும்.

இருப்பினும், அவ்வப்போது ரயில்களில் முறையான பரமாரிக்கப்படுவது இல்லை என்றும் கழிவறைகளில் தண்ணீர் வருவது இல்லை என்பதும் பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. அதேபோல், ஏசி வசதி கொண்ட பெட்டிகளில் சில நேரங்களில் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்றும் பயணிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கும் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில், மும்பையில் இருந்து நாகர்கோவில் சென்ற அதிவிரைவு ரயிலில் வந்த பயணிகள் நேற்று திடீரென செங்கல்பட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த விவரம் வருமாறு:- மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மும்பையில் இருந்து நேற்று முன் தினம் புறப்பட்டது.

கர்நாடகா மாநிலம் ஆந்திரா வழியாக தமிழகத்திற்கு வரும் இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக இந்த ரயில் நாகர்கோவில் சென்று அடையும். மும்பையில் இருந்து வரும் பயணிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக இந்த ரயிலில் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில், இந்த ரயிலில் கழிவறையிலும் வாஷ் பேஷனிலும் தண்ணீர் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
ரயிலில் தண்ணீர் வரவில்லையே என்று அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், எந்த ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், பொறுமை இழந்த பயணிகள் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் ரயிலை விட்டு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த ரயில் அதிகாரிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு ரயில் சென்றதும் கண்டிப்பாக தண்ணீர் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகே சமதானம் அடைந்த பயணிகள் ரயிலில் ஏறினர். இந்த சம்பவத்தால் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.












Click it and Unblock the Notifications