14 மாதங்களுக்கு பிறகு சென்னைக்கு குட் நியூஸ்! நாளை முதல் கடற்கரை - வேளச்சேரி இடையே ரயில் சேவை!
சென்னை: நாளை முதல் மீண்டும் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 45 ரயில்களும், மறுமார்க்கத்தில் 45 ரயில்களும் இயக்கப்பட உள்ளன. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நிறுத்தப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். சென்ட்ரல் - ஆவடி, வேளச்சேரி, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரூட்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை புறநகரில் இருந்து நகரத்திற்குள் வரும் பயணிகள் பெரும்பாலானோர் மின்சார ரயில்களைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை ரயில்கள் சில நிமிடம் தாமதம் ஆனாலும் கூட ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். இந்நிலையில், அவ்வப்போது பராமரிப்பு பணிகளுக்காக ரயில் சேவையில் சில மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்து வருகிறது.
சென்னை கடற்கரை - எழும்பூர் ரயில் முனையம் இடையே 4 ஆவது வழித்தடம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கப்பட்டது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 வழித்தடங்கள் மட்டுமே இருந்த நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் காத்திருந்து செல்ல வேண்டி இருந்ததால் அதற்கு தீர்வு காணும் வகையில் 4.3 கி.மீ தொலைவுக்கு 4வது வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இதன் காரணமாக, கடற்கரை - வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. கடற்கரைக்கு பதிலாக சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், ஓராண்டைக் கடந்து நடைபெற்று வந்த 4வது வழித்தடம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், நாளை முதல் வழக்கம்போல் மீண்டும் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 45 ரயில்களும், மறுமார்க்கத்தில் 45 ரயில்களும் இயக்கப்பட உள்ளன. ரயில்கள் இயக்கப்படும் நேர அட்டவணையையும் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.
அதிகாலை 4 மணிக்கு வேளச்சேரியில் இருந்து முதல் ரயில் புறப்படும், இரவு 11.13 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு கடைசி ரயில் புறப்படும். 14 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications