அசிங்கமாக பேசி.. கையை மேலே வைத்து தவறாக நடக்க முயற்சி - பாஜக நிர்வாகி மீது திருநங்கை பாலியல் புகார்!
சென்னை: பாஜக மாவட்ட தலைவர் மீது பாஜகவைச் சேர்ந்த நிர்வாகியான திருநங்கை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும், பதவி வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என மிரட்டுவதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாஜகவை சேர்ந்த திருநங்கை ஒருவர், பாஜக மாவட்டத் தலைவர் பணம் வாங்கிக்கொண்டு பதவி கொடுப்பதாக குற்றம்சாட்டியிருப்பது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநங்கை ரதி
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் ரதி (எ) ராஜா (40). திருநங்கையான இவர் பாஜகவில் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராகவும் பொறுப்பில் இருந்து வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி 76வது வார்டில் பாஜக சார்பாக நின்று தோல்வி அடைந்தார். இந்நிலையில், திருநங்கை ரதி சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

தவறாக நடக்க முயற்சி
அவரது புகாரில், சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவராக உள்ள கபிலன் என்பவர் கட்சி மூலமாக எனக்கு அறிமுகமானார். பின்னர் அவரது பி.ஏ கடந்த சில நாட்களுக்கு முன்பு கபிலன் அழைக்கிறார் என்று கூறி எனக்கு போன் செய்தார். அதன் பேரில் நான் அங்கு சென்றதும் என்னிடம் அசிங்கமாகப் பேசி மேலே கையை வைத்து தவறாக நடக்க முயற்சி செய்தார்.

குடிபோதையில்
அவர்கள் குடிபோதையில் இருந்ததால் நான் அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்துவிட்டேன். அதன் பிறகு எனது வீட்டிற்கு அடிக்கடி ஆட்கள் வந்து என்னை மிரட்டி விட்டுச் செல்கின்றனர். இதுகுறித்து நான் எனது கட்சி தலைமை அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன். அங்கு அவரை விசாரணைக்கு அழைத்தபோது அவர் அங்கு வரவில்லை. தொடர்ந்து அடியாட்களை வைத்து என்னை மிரட்டுகிறார் கபிலன்.

பணம் கொடு
மேலும், கட்சியில் ஏதேனும் பதவி வேண்டும் என்றால் ரூ. 50 ஆயிரம் பணம் தரவேண்டும் என மிரட்டுகிறார். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு பாஜக சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் தான் காரணம் என தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

பணம் தராமல்
மேலும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருநங்கை ரதி, "கடைசியாக பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது மாவட்ட தலைவர் கபிலன் 50க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து வரச் சொன்னார். அதற்கு பணம் தருவதாக கூறினார். நான் வட்டிக்கு வாங்கி பணம் கொடுத்து அழைத்துச் சென்றேன். ஆனால், பணம் தராமல் ஏமாற்றிவிட்டார். கட்சியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் ஒன்று பணம் தர வேண்டும் அல்லது சுகம் தர வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலை விசாரிக்க வேண்டும்
இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனது புகார் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விசாரணை நடத்தி கபிலன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பாஜகவை சேர்ந்த திருநங்கை ஒருவர் மாவட்ட தலைவர் மீது பாலியல் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications