இதுதான் சமத்துவம்.. டீ சாப்பிடுங்க! திருநங்கைகளை வீட்டிற்கு அழைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்! பின்னணி
சென்னை: இன்று திருநங்கையர் நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினை இன்று திருநங்கைகள் சிலர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் நாளை திருநங்கையர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது. கடந்த மார்ச் 11, 2011 தமிழ்நாடு அரசு மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சமூக ரீதியாக திருநங்கைகளின் பாதுகாப்பு கருதியும், அவர்களுக்கான நலத்திட்டங்களை கண்காணிக்கும் வகையிலும் அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

நலவாரியம்
ஏப்ரல் 15, 2008 ஆம் ஆண்டு தமிழக அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட இந்த வாரியம் திருநங்கைகள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. திமுக கட்சிக்கு பொதுவாகவே திருநங்கைகள் மீது பெரிய ஆதரவு உள்ளது. அதற்கு இந்த நலவாரியமும் முக்கிய காரணம் ஆகும். தற்போது நகரப்பேருந்துகளிலும் கூட திருநங்கைகளுக்கு இலவச பயணம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்
சமீபத்தில் நடத்த உள்ளாட்சி தேர்தலிலும் திமுக சார்பாக சில இடங்களில் திருநங்கை வேட்பாளர்கள் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வென்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பாக திருநங்கை ரியா என்பவர் போட்டியிட்டார். தொடக்கத்தில் இருந்து இவர் அதிக கவனம் பெற்ற நிலையில் கடைசியில் வெற்றிபெறார்.

வேலூர்
அதேபோல் வேலூர் மாநகராட்சியின் 37ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில்தான் இன்று திருநங்கையர் நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினை இன்று திருநங்கைகள் சிலர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர்கள் ரியா, சுதா, கேத்ரினா, செல்வி சாந்தோசம், மோனிகா ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.

ஸ்டாலின் வீடு
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற திருநங்கைகளை முதல்வர் ஸ்டாலின் வரவேற்று விருந்தினர்கள் அறையில் அமர வைத்தார். எப்படி இருக்கீங்க.. வாரியம் எப்படி செயல்படுகிறது.. திருப்தியா இருக்கா என்று கேட்டு முதல்வர் அவர்களிடம் விசாரித்தார். நல்லா இருக்கோம் சார்.. ரொம்ப நன்றி என்று திருநங்கைகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். அவர்களுக்கு தேநீர் வழங்கி அவர்களிடம் சில நிமிடம் பேசியபடி இருந்தார்.

போட்டோ
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் முதல்வருடன் சமமாக அமர்ந்து தேநீர் குடித்த சம்பவம் பெரிய கவனம் பெற்றுள்ளது. முதல்வருடன் இவர்கள் தேநீர் அருந்திய புகைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அப்போது நகர பேருந்துகளில் இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்கும் திட்டத்திற்கு திருநங்கைகள் முதல்வரிடம் நன்றி தெரிவித்தனர். அதேபோல் தேர்தலில் பல்வேறு திருநங்கை வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications