போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு விடிவு கிடைக்குமா? நாளை தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம்!
சென்னை: தமிழக அரசின் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஆகஸ்ட் 27) தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னையில் பல்லவன் இல்லம் அருகே மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் போக்குவாத்துக் கழக தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

கடந்த மாதம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் சங்கம் சார்பில் 8வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 27 ல் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே கர்சன் கூறுகையில், போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் நீண்ட காலப் பிரச்சினை நிலுவையில் உள்ளது. ஓய்வூதியர்களுக்கு 106 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும் அகவிலைப்படி உயர்வு வழங்காமல் மேல்முறையீடு செய்தும் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை.

மேலும் மருத்துவ காப்பீடும் வழங்கப்படவில்லை. இது தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் இன்று வரை வீடுதோறும் தொழிலாளர்களிடமம் பொதுமக்களிடமும் துண்டுப் பிரசுரம் வழங்கி பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்துள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 27ஆம் தேதி (நாளை) தமிழகம் தழுவிய அளவில் 9 இடங்களில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன் ஒரு பகுதியாக சென்னை பல்லவன் இல்லம் அருகே மறியல் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பாரபட்சம் இன்றி தொழிற்சங்க நிர்வாகிகளை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் டிவி பத்மநாபன் கூறுகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை குரோம்பேட்டை மாநகரப் போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
கடந்த காலங்களில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பும் சில சங்கங்களை சேர்ந்த கூடுதல் பிரதிநிதிகள் கூட்ட அரங்கிற்கு அனுமதிக்கப்படுவது உண்டு.
எனவே பாரபட்சம் இன்றி சங்க வாரியாக இரண்டு பிரதிநிதிகளை பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், இதன் மூலம் கலந்து பேசி உடனடியாக தீர்வு எடுக்க முடியும். பேச்சு வார்த்தையின் கூட்டுநருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications