ஸ்கூல் நேரத்தில் எல்லா டவுன் பஸ்களையும் இயக்கணும்! நமக்கென்னணு இருக்கக் கூடாது -அமைச்சர் சிவசங்கர்
சென்னை: மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றிட ஏதுவாக அனைத்து நகரப் பேருந்துகளையும் காலை மாலை வேளைகளில் இயக்கிட வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் சாதாரணக் கட்டணப் பேருந்துகள் இயக்கப்படாத பகுதிகளை கண்டறிந்து, அங்கு பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் அட்வைஸ் செய்துள்ளார்.
மேலும், இரவு நேரப் பேருந்துகள் இயக்கத்தையும், தொலைதூர பேருந்துகள் இயக்கத்தையும் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆய்வுக்கூட்டம்
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டமானது, அமைச்சர் சிவசங்கர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் கோபால் ஐ.ஏ.எஸ். மற்றும் போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் பிறப்பித்த உத்தரவின் விவரம் வருமாறு;

அமைச்சர் அறிவுறுத்தல்
*சாதாரணக் கட்டணப் பேருந்துகள் இயக்கப்படாத பகுதிகளை கண்டறிந்து, அங்கு பேருந்துகளை இயக்க வேண்டும்.
*மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றிட ஏதுவாக அனைத்து நகரப் பேருந்துகளையும் இயக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
*மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் அனைத்துப் பேருந்துகளையும் ஒரே வண்ணத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இரவு நேரப் பயணம்
* நாள்தோறும் இயக்கப்படும் இரவு நேரப் பேருந்துகள் இயக்கத்தையும், தொலைதூர பேருந்துகள் இயக்கத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
*அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையத்தை விரைவில் செயல்படுத்தவும்.
* தகவல் தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்தி, பேருந்துகள் இயக்கம், வழித்தடத்திற்கான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தினசரி பணி ஒதுக்கீடு, காற்றின் அழுத்தம், அனைத்துப் பேருந்துகளிலும் CCTV கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள், பேருந்தினுள் ஒலிபெருக்கி மூலம் அடுத்த பேருந்து நிலைய அறிவிப்பு உள்ளிட்டவற்றை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

வருவாயை அதிகரிக்க
* பயணக் கட்டணத்தை தவிர்த்து, விளம்பரம் மூலம் இதர வருவாயினை பெருக்குவதற்கான சாத்தியக்கூறுகளை முழுமையாக ஆராய்ந்து செயல்படுத்திட வேண்டும்.
*டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) மற்றும் மின்சாரப் பேருந்துகளை படிப்படியாக இயக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
*மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தின் மூலம் 126.10 கோடி பெண்கள் கட்டமின்றி பயணம். இத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக அதிகாரிகளுக்கு பாராட்டு. பேருந்துகளின் இயக்கம் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கூறிய அனைத்து உத்தரவுகளையும் அமைச்சர் சிவசங்கர் பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications