தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்டோவை தூக்கி வைத்து கொண்டாடிய ஆப்பிரிக்க பழங்குடியினர்! வைரல் வீடியோ
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் போட்டோவை தூக்கி வைத்துக் கொண்டு ஆப்பிரிக்க நாட்டின் பழங்குடியினர் பாரம்பரிய நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் அவருக்கு பழங்குடியின மக்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையின்படிதான் மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நடந்து கொள்ளும். அந்த வகையில் தற்போது ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பழங்குடியினருக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறது.

10 கோடி ரூபாய் செலவில், 200 நிலமற்ற பட்டியல், பழங்குடியின விவசாயத் தொழிலாளர்கள் நிலம் வாங்க தமிழக அரசு மானியம் வழங்குகிறது. ரூ 1000 கோடி மதிப்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் காக்கும் அயோத்திதாசர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்காகத் தொண்டாற்றிவரும் ஒருவருக்கு, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு வழங்கும் அண்ணல் அம்பேத்கர் விருதின் பரிசுத் தொகை 1 லட்சம் ரூபாய் என்பது 5 லட்சம் ரூபாய் எனத் திமுக அரசால் உயர்த்தி வழங்கப்படுகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டபூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் உரிய ஆலோசனைகளை அரசுக்கு வழங்கிட தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்றிட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை இந்தத் திமுக அரசு அறிமுகம் செய்துள்ளது. அத்திட்டத்தின் கீழ், உற்பத்தி, வணிகம், மற்றும் சேவை சார்ந்த புதிய தொழில்களைத் தொடங்கிட மொத்த மதிப்பீட்டில் 35 சதவீதத் தொகை முதலீட்டு மானியமாகவும் (capital subsidy), 65 சதவீதத் தொகையில் அதிகபட்சமாக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடனாகவும் வழங்கப்படுகிறது. 65 சதவிகித வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில் 6 சதவிகித வட்டியையும் திமுக அரசே ஏற்கிறது.
நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 மாணவர் விடுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இவை இல்லாமல் இன்னும் ஏராளமான பல நலத்திட்டங்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டங்கள் குறித்து தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் சுகுமார் என்பவர் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான டான்சானியாவில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தெரியவந்தது. இதை ஆர்வமுடன் கேட்ட இந்த மக்கள், முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி பாரம்பரிய உடையில் நடனமாடி அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications