திருச்சி கிழக்கு வேட்பாளர் இவரா? முக்கிய ஆலோசனையில் இருக்கும் விஜய் உடன் கு.ப.கிருஷ்ணன் சந்திப்பு
சென்னை: லால்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த கு.ப.கிருஷ்ணனை திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யை சந்திக்க பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்.
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்றைய தினம் எண்ணப்பட்டது. இதில் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக விஜய் தொடர இருப்பதாக கூறப்படுகிறது.
பெரம்பூர் தொகுதி தலைநகர் சென்னையில் இருக்கும் தொகுதி. இந்த தொகுதியை தக்க வைத்து கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய விஜய் திட்டமிட்டு இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்தது.
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் திருச்சி கிழக்கு தொகுதியில் களமிறக்கப்பட திட்டமிட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லால்குடி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட லாட்டரி அதிபா் மாா்ட்டினின் மனைவியும், தொழிலதிபருமான லீமா ரோஸ் மாா்ட்டின் 60,795 வாக்குகள் பெற்று, 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். முன்னாள் அமைச்சரான தவெக வேட்பாளா் கு.ப. கிருஷ்ணன் 58,056 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தையும், திமுக வேட்பாளா் பாரிவள்ளல் 55,565 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த கு.ப.கிருஷ்ணனை திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கு.ப.கிருஷ்ணனின் மகனான சிரஞ்சீவி தான், திருச்சி கிழக்கு தொகுதியில் நேற்று விஜய்க்கான வெற்றிச் சான்றிதழை பெற்றார். இவர்தான் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கான மாற்று வேட்பாளராகவும் இருந்தார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யை சந்திக்க பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளார் கு.ப.கிருஷ்ணன். தவெக சார்பில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் இன்று விஜய்யை சந்தித்தனர். அமைச்சரவை பட்டியல் தொடர்பாக விஜய் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
வரும் மே 7 ஆம் தேதி விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விஜய் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் அவரை திருச்சி மண்டல தவெக பொறுப்பாளரான கு.ப.கிருஷ்ணன் சந்தித்துள்ளார்.












Click it and Unblock the Notifications