போனால் போகட்டும் போடா! மகனை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத திமுக எம்.பி.திருச்சி சிவா!
சென்னை: அண்மையில் பாஜகவில் இணைந்த தனது மகன் சூர்யாவை பற்றி திமுக எம்.பி. திருச்சி சிவா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம்.
தந்தை என்று கூட பாராமல் தன்னை பற்றி பேட்டி கொடுக்கிறேன் என்ற பெயரில் வாய்க்கு வந்ததையெல்லாம் மகன் பேசுவதை தான் அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மற்றபடி சூர்யா பாஜகவில் இணைந்தது பற்றி பேசி மகனை பெரிய மனிதன் ஆக்க விரும்பவில்லயாம் திருச்சி சிவா எம்.பி.
திருச்சி சிவா மகன்
திமுக மூத்த எம்.பி.க்களில் ஒருவரும், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா இரண்டு நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். அவர் இணைந்தது ஒரு செய்தி என்றால் அதன் பிறகு அவர்தினமும் கொடுக்கும் பேட்டிகளில் பல செய்திகள் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக தனது தந்தை திருச்சி சிவாவை பற்றி சூர்யா விமர்சித்து பேசுவது அவரது குடும்பத்தினருக்கு கடும் கோபத்தை உருவாக்கியிருக்கிறது.
அலட்டிக் கொள்ளவில்லை
தன்னை பற்றி மகனே இவ்வாறு பேசுவதை நினைத்து திருச்சி சிவா மனதளவில் மிகுந்த வருத்தப்பட்டிருக்கிறார். மற்றபடி மகன் பாஜகவுக்கு சென்றது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லையாம். சூர்யாவால் பாஜகவுக்கு கிடைத்த 50 ஓட்டுக்கள் குறையுமே தவிர கூடாது என்பது தான் திருச்சி சிவாவின் பதிலாகஇருந்திருக்கிறது. மேலும், சூர்யா பாஜகவில் இணைந்தது பற்றி ஊடகங்களில்
பேட்டி கொடுக்க விரும்பாத திருச்சி சிவா தெரியாத எண்களில் இருந்து வரும்
அழைப்புகளை ஏற்பதை கூட தவிர்த்துவிடுகிறாராம்.
பல ஆண்டுகளாக
பல ஆண்டுகளாகவே தந்தை மகனுக்கு மத்தியில் உரசல் இருந்து வந்த நிலையில் அதனை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என குடும்ப உறவினர்கள் சிலர் மெனக்கெட்டுள்ளனர். ஆனால் தந்தையுடன் மீண்டும் இணைவதை விரும்பாத சூர்யா, சில தடாலடி பதில்களையும் அளித்தாராம். இதன் காரணமாகவே உறவுப்பாலமாக திகழ நினைத்த உறவுகளும் ஒதுங்கிக் கொள்ள காரணமாம். இதனிடையே தந்தையும் மகனும் இன்று அடித்துக் கொள்வார்கள் நாளை சேர்ந்து கொள்வார்கள் அதனால் சூர்யாவை நம்ப வேண்டாம் என மூத்த அமைச்சரும் திருச்சி மாவட்ட திமுக முகமுமான கே.என்.நேருவும் கடைசிக்கட்டத்தில் சூர்யாவை கைவிட்டிருக்கிறார். இதன் காரணமாகவே பாஜகவில் இணைவது என்ற அதிரடி முடிவை சூர்யா எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஊழியர்கள்
இதனிடையே பாஜகவில் இணைந்த சூர்யா குறித்து அவரது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்கள் பகீர் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கத் தொடங்கியுள்ளனர். குடிபழக்கம் காரணமாக மிகவும் ஆணவமாக நடந்துகொள்ளக் கூடியவர் சூர்யா என்றும் காரில் தந்தையை வைத்துக்கொண்டே புகை பிடிக்கும் அளவுக்கு மோசமானவர் எனவும் திருச்சி சிவாவிடம் ஓட்டுநராக பணியாற்றிய முன்னாள் ஊழியர் தெரிவித்திருக்கிறார். இதனிடையே ஒரு நூறு பேரையாவது தன்னுடன் பாஜகவில் இணைக்க வேண்டும் என்ற முயற்சியோடு திருச்சி மற்றும் சென்னையில் உள்ள தனது நட்பு வட்டங்களுக்கு வலை வீசி வருகிறாராம் சூர்யா.