திருச்சி சிவாவுக்கு ஓய்வு கொடுக்க நினைக்கும் ஸ்டாலின்... புதுமுகத்திற்கு வாய்ப்பு
சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைவதால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும், சொற்பொழிவாளருமான திருச்சி சிவா மூன்று முறைக்கு மேல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் அடுத்த முறை ராஜ்யசபா சீட் கொடுப்பதற்கு ஸ்டாலினுக்கு விருப்பமில்லையாம். அவருக்கு பதில் புது முகம் ஒருவருக்கு இந்தமுறை வாய்ப்பு தர வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். அந்த புதுமுகத்தை கூட ஸ்டாலின் ஏற்கனவே தேர்வு செய்து வைத்துவிட்டாராம். இதனால் திருச்சி சிவாவின் டெல்லி லாபி வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ளது.

திருச்சி சிவாவை பொறுத்தவரை மாணவரணி, இளைஞரணி என பல பொறுப்புகளில் இருந்தவர். மிகச்சிறந்த பேச்சாளரும் கூட. திருச்சி மாவட்டத்தில் கே.என்.நேருவுக்கு எதிராக அரசியல் செய்ய முயற்சித்து அதில் தோல்வியை தழுவியவர். பெயருக்கு முன்னால் திருச்சியை சேர்த்துக்கொண்டாரே தவிர திருச்சியில் அதிக நாட்கள் தங்காதவர். பெரும்பாலான நாட்களை டெல்லியிலேயே கழித்ததால் திருச்சி மாவட்ட நிர்வாகிகளிடம் சிவாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு இல்லை. மேலும், கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு தனிப்பட்ட விவகாரங்களிலும் சிவாவின் பெயர் அடிபட்டது.
இதனால் இது குறித்தெல்லாம் கூட்டி கழித்து பார்த்த ஸ்டாலின், மீண்டும் சிவாவை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சிவாவை பொறுத்தவரை நாடாளுமன்றத்தில் ஆணித்தரமாக புள்ளிவிவரங்களை அடுக்கி பேசக்கூடியவர். அதில் எந்த மாற்றமும் இல்லை. யாருக்கும் சந்தேகமும் இல்லை. அவர் இல்லாத இடத்தை நிரப்பும் வகையில் புள்ளிவிவரங்களுடன் பேசக்கூடிய வகையில் தான் ஒருவரை ஸ்டாலின் புதிதாக தேர்வு செய்து வைத்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications