சூர்யா சிவா மீது "கை" வைத்த திமுக.. "ரகசியம் வெளியிடுவேன்".. சீறிய வாரிசு.. பாஜகவால் திணறிய திருச்சி
திருச்சி சூர்யா சிவா கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
சென்னை: சூர்யா சிவா கைது நடவடிக்கையை கண்டித்து பாஜக திருச்சியே திரும்பி பார்க்கும் அளவுக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டது.. இதையடுத்து பாஜகவினர் 285 பேர் கைதாகி உள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
சமீபத்தில், பாஜகவில் இணைந்தவர் திமுகவின் திருச்சி சிவாவின் மகன், சூர்யா சிவா.. கட்சியில் யார் சேர்ந்தாலும் முக்கிய பதவியை தந்து அழகு பார்க்கும் பாஜக, சூர்யாவுக்கும் பெரிய போஸ்டிங் தந்தது.
பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் என்ற பதவியை தந்தது.. முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை மொத்தமாக அள்ள, தமிழக பாஜக இப்படி ஒரு பதவியை சூர்யாவுக்கு ஒதுக்கி தந்துள்ளதாக தெரிகிறது..
சூர்யா பாஜக
இந்நிலையில், கடந்த ஜூன் 11-ம் தேதி சூர்யாவின் கார் மீது ஒரு தனியார் பஸ் மோதியது... இதில், சூர்யாவின் கார் நொறுங்கிவிட்டது.. சேதமடைந்த தன்னுடைய காரை சீரமைப்பதற்கான செலவுத்தொகையை தனியார் பஸ் நிறுவனம் வழங்கவில்லை என்றுகூறி, அந்நிறுவனத்துக்கு சொந்தமான இன்னொரு பஸ்ஸை ஜுன் 19-ம் தேதி சூர்யா கடத்தி சென்றதாக கூறப்பட்டது.. இது தொடர்பாக சூர்யா சிவா மீது கன்டோன்மென்ட் போலீசிலும் புகார் தரப்பட்டது.
சூர்யா கார் சேதம்
இதனிடையே, சூர்யா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, "என்னுடைய கார் மட்டும் இல்லாமல், 4 கார்கள் மீது அந்த பஸ் மோதி விபத்து ஏற்படுத்தியது.. இது தொடர்பாக திருநாவலூர் போலீசில் ஜூன் 12ம் தேதி புகார் தந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.. எப்பொழுது வேண்டுமானாலும் என்னை போலீஸ் கைது செய்யலாம்.. இது அனைத்தும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தலின்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காவல் துறையினரை கையில் வைத்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் என் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சூர்யா ஆவேசம்
திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள் குறித்த ரகசியங்களை வெளியிட்டால் அவர்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு இருக்கும்... ஒரு அளவுக்குதான் பொறுமையாக இருப்பேன். அதற்கு பிறகு, அனைவருடைய ரகசியங்களையும் வெளியிட்டு விடுவேன், தேவையில்லாமல் கட்டப்பஞ்சாயத்து வேலையை திமுக செய்யக்கூடாது" என்று ஆவேசமாக கூறியிருந்தார்.
சூர்யா கைது
இதற்கு பிறகு போலீசார் சூர்யாவை கைது செய்தனர்.. இதனால் கொந்தளித்து போன பாஜக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்டப் பொறுப்பாளராக உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தது... இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திமுக அலுவலகம் அமைந்துள்ள திருச்சி வி.என்.நகர் பகுதியில் மாநகர காவல் துணை ஆணையர்கள் அன்பு, ஸ்ரீதேவி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் நேற்று குவிக்கப்பட்டிருந்தனர்.
ராஜசேகரன்
இந்நிலையில், பாஜக திருச்சி மாவட்டத் தலைவர் எஸ்.ராஜசேகரன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் எம்.கருப்பு முருகானந்தம், ஓபிசி அணி மாநிலத் தலைவர் சாய் சுரேஷ் உள்ளிட்ட பாஜகவினர் சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வி.என்.நகர் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை கரூர் புறவழிச் சாலை பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றபோது, திடீரென தள்ளுமுள்ளு அங்கே ஏற்பட்டது. பிறகு ராஜசேகரன், கருப்பு முருகானந்தம் உட்பட 285 பேரை போலீஸார் கைது செய்து, ஒரு தனியார் மண்டபத்தில் வைத்திருந்தனர்.
கருப்பு முருகானந்தம்
அப்போது, கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த மிரட்டலுக்கெல்லாம் பாஜக பயப்படாது.. கூடிய சீக்கிரம் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரப்போகிறது... அப்போது, ஒருதலைபட்சமாக நடந்துகொண்ட, இதே காவல் துறை அதிகாரிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்... அமைச்சராக இருப்பதால் பாஜகவினர் மீது பொய் வழக்கு போடலாம் என்று யாரும் நினைக்கக்கூடாது... ஒவ்வொரு அமைச்சரும் செய்யக்கூடிய ஊழல் லிஸ்ட்கள் எங்களிடம் உள்ளன. பாஜகவினரை மிரட்டினால், மாநிலத் தலைவர் அண்ணாமலையை வரவழைத்து பல ஆயிரக்கணக்கானோரை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.