டிடிவி தினகரனை மிரட்டிதான் கூட்டணிக்கு வரவழைத்தார்கள்.. திருச்சி சூர்யா கொடுத்த ஷாக்!
சென்னை: அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்திருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக 2021 சட்டசபைத் தேர்தலை விடவும் அதிமுக கூடுதல் பலத்துடன் இந்த தேர்தலில் களமிறங்குவதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாளை என்டிஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஒன் இந்தியா அரசியல் சேனலுக்கு திருச்சி சூர்யா பேட்டி அளித்துள்ளார். அதில் திருச்சி சூர்யா பேசுகையில், அமமுகவின் வருகை என்னை பொறுத்தவரை ஒரு கேள்விக்குறியான ஒன்று தான். ஏனென்றால் அமமுக என்ற கட்சி உருவானதே துரோகத்தை எதிர்த்து அதிமுகவை மீட்பதற்கு தான். சில நாட்களுக்கு முன் முதல்வர் வேட்பாளரை மாற்றக் கோரி கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர்.. என்ன பெரிதாக மாறிவிட்டது.. அதனால் எடப்பாடியை ஏற்க டிடிவி தினகரன் தயாரானது ஏன்? இவரை நம்பி வந்தவர்களின் அரசியல் செய்தவர்களின் நிலை என்ன? பலரும் நஷ்டம் அடைந்தார்கள். பாஜக எந்த வகையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டது? சசிகலாவை சிறைக்கு அனுப்பியது பாஜக தான்.
ஓபிஎஸ்ஸை தர்மயுத்தம் நடத்த வைத்தது பாஜக.. நீங்கள் கையை காட்டிய எடப்பாடியை கையகப்படுத்தி உங்களுக்கு எதிராகவே திருப்பியதும் பாஜக தான்.. உங்களை சிறையில் அடைத்ததும் பாஜக தான்.. 18 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்தார்கள்.. இப்படி எந்த நல்லதும் செய்யாமல் இருந்த பாஜகவுடன் டிடிவி தினகரன் கைகோர்த்துள்ளார். இன்று ஏன் கூட்டணி என்றால், அது அரசியல் என்று கூட விட்டுவிடலாம்.
ஆனால் எடப்பாடியை எதிர்த்துதான் அமமுகவை தொடங்கினார். இன்று வரை ஒபிஎஸ் அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறார். ஆனால் துரோகியை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க கூட்டணி அமைத்திருக்கிறார். முக்குலத்தோர் சமூக அடையாளத்தை வைத்துதான் டிடிவி தினகரன் அரசியல் செய்தார். ஆனால் இவரின் தேவைக்காக மறந்துவிடுகிறார்.
இப்போதைய சூழலில் டிடிவி தினகரனுக்கு முன்பை போல் முக்குலத்தோர் ஆதரவு இல்லை. சுயநலத்திற்காக அமமுகவை அடகு வைக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அண்ணாமலை இதே எடப்பாடி பழனிசாமியை கிணற்று தவளை என்று விமர்சித்தார். அன்புமணியை கவுன்சிலராக இருக்க கூட தகுதியற்றவர் என்று கூறினார். இப்போது இவர்கள் எடப்பாடி பழனிசாமிக்காக பணியாற்ற உள்ளனர்.
சசிகலாவை ஏற்பாரா எடப்பாடி பழனிசாமி? ஓபிஎஸ்-க்காகவாவது ஏதாவது ஒரு டிமாண்ட் வைத்துள்ளாரா? ஓபிஎஸ்ஸின் அடுத்தக் கட்ட நிலைப்பாடு எடுக்க தடுமாறுவதால் தான், அவரின் ஆதரவாளர்கள் மாற்று கட்சிகளுக்கு செல்கிறார்கள். மாற்றி மாற்றி விமர்சிப்பவர்கள் திடீரென சேர்ந்தால், மக்கள் என்ன நினைப்பார்கள்.
இப்படி சேர்வதே முடிவு என்றால், எதற்காக அப்போது சண்டை போட்டீர்கள். ஏனென்றல் இத்தனை நாட்களாக இவர்களுக்காக சண்டை போட்டவர்கள் நஷ்டத்திலும், நடு ரோட்டிலும் இருக்கிறார்கள். இதனால் அதிமுக - அமமுக கூட்டணியால் தொண்டர்களே கோபத்தில் தான் இருக்கிறார்கள். அதேபோல் விஜயகாந்த் உருவாக்கிய கல்லூரி, சேனல் இல்லாததை போல், அரசியல் கட்சியும் இப்போது இல்லை.
தேமுதிக இப்போது 3 கட்சிகளுடனும் பேசி வருகிறார்கள். தேமுதிக கல்லூரியை வாங்கியதே திமுக நிர்வாகிகள் தான். அதேபோல் விஜய்யுடனும் பேசுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியுடனும் பேசி வருகிறார்கள். தேமுதிகவை யாருமே கூப்பிட தயாராக இல்லை. 2026ல் விஜயபிரபாகரன் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது. அனுதாபத்தால் மட்டுமே விஜயபிரபாகரன் அதிக வாக்குகளை பெற்றார்.
என்டிஏ அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் முட்டுக்கொடுக்கலாம். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தான். தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்க்கட்சியில் இருந்து ஆளுங்கட்சிக்கு செல்கிறார்கள். ஆனால் ஆளுங்கட்சியில் இருந்துதான் எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டும்.
எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளர் நாற்காலி மீது மட்டுமே ஆசை. அவருக்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறி கிடையாது. விஜய் மாதிரி ஒரு சுனாமி எதிரில் வரும் போது அதிமுக தாங்குமா என்பது கேள்வி தான். அண்ணாமலை இருக்கும் போதே அதிமுக மீதான நம்பிக்கை குறைந்தது. அதேபோல் அண்ணாமலை பேசிய போது டிடிவி தினகரன் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளவில்லை.
பின்னர் டிடிவி தினகரனை நேரடியாக டெல்லிக்கு அழைத்து என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. மிரட்டிதான் கூட்டணிக்கு வரவழைத்திருப்பார்கள். விஜய்க்கே அவ்வளவு சிக்கல் வருகிறது. இவர்களுக்கு எவ்வளவு சிக்கல் வரும் என்று தெரிவித்துள்ளார். இவரது முழு பேட்டியை காண்பதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலை அணுகவும்.












Click it and Unblock the Notifications