மும்மொழி கொள்கை, நீட் தேர்வுக்கு பெருகும் ஆதரவு.. அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த தமாகா
சென்னை: மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு பெரும்பாலான பெற்றோர், மாணவர்கள் ஆதரவாக இருப்பதால், தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்காது.

மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமான மத்திய அரசின் கல்வி நிலைப்பாட்டிற்கு பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் ஆதரவாகவே இருக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசின் எந்த அதிகாரப் பூர்வமான அறிவிப்பும் வராத நிலையில், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையும் என்று கூறுவது உண்மை நிலைக்கு எதிரானது.
கடந்த வாரம் 25.02.2025 தமிழகத்திற்கு வருகை தந்த, மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள், தொகுதி மறுசீரமைப்பில் எந்த நிலைப்பாட்டையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும், அப்படி இருந்தாலும் தமிழகத்திற்கு பாராளுமன்ற தொகுதிகள் கூடுமே தவிர குறையாது என்றும் தெளிவுப்படக் கூறியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் தொடர்ந்து வளர்ந்துகொண்டு இருக்கும் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருக்கும் பொழுது, அதையெல்லாம் மக்களிடம் இருந்து திசைத் திருப்பவே இக்கூட்டம் நடைபெறுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது. வருகிற மார்ச் 5-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications