என் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம்.. நயினார் நாகேந்திரனுக்கு திரிஷா கண்டனம்
சென்னை: என் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம் என நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மாநில அளவில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி பேசுவதை நான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் பேசியிருந்த நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகை திரிஷாவும் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது வழக்கறிஞர் வாயிலாக திரிஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பாதவது:-
திரிஷா கடும் கண்டனம்
அரசியலில் நடுநிலையான நிலைப்பாட்டையே கொண்டு இருக்கிறேன். உயரிய பொறுப்பில் இருப்பவர்கள் இன்னும் பொறுப்புடன் நிதானத்துடன் பொது வெளியில் பேச வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை பொது விவாதத்திற்கு உரியது இல்லை. இப்படி ஒரு அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை.
அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.. திரைக்கலைஞர் என்று மட்டுமே நான் அடையாளப்படுத்தப்பட விரும்புகிறேன். அரசியல் ரீதியாக இல்லை. தனக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தனது பெயரை பயன்படுத்தக் கூடாது. என்று கூறியுள்ளார்.
என்ன நடந்தது?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், திமுக, அதிமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
விஜய் பேசும் போது, "அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார். சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கை வாங்கி காட்டுங்கள்" என விஜய் பேசினார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது.
திரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வரவேண்டும்
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும். குடும்பங்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும்." என்று கூறினார். நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு தவெகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை
பொதுவெளியில் ஒரு அரசியல் தலைவர் பேச்சும் பேச்சா இது.. என்று நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். திமுகவை சேர்ந்த பெண் தலைவர்களும் நயினார் நாகேந்திரன் பேச்சை கண்டித்து இருந்தனர். சர்ச்சைக்குரிய தனது பேச்சு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் நயினார் நாகேந்திரன் கடந்த இரு நாட்களாக இருந்தார்.
இந்த நிலையில் இன்று தனது பேச்சு தொடர்பாக நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை" என்று கூறியிருந்தார். நயினார் நாகேந்திரன் இப்படி பேசிய சில மணி நேரத்தில் திரிஷா கடும் கண்டனத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications