நடிகை த்ரிஷாவின் ‘எக்ஸ்’ சமூக வலைதள கணக்கில் ஹேக்கர்கள் அட்டூழியம்! கிரிப்டோ கரன்சி பதிவால் ஷாக்!
சென்னை: நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் திடீரென கிரிப்டோ கரன்சி குறித்த பதிவு வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
6 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட நடிகை த்ரிஷாவின் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கம், சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. முதலில் கிரிப்டோ கரன்சி குறித்து பதிவு ஒன்று த்ரிஷாவின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட நிலையில், சில நிமிடங்களிலேயே அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

"முதல் முறையாக இதுபோன்ற ஒன்றைச் செய்வதில் நான் உற்சாகமடைகிறேன். நான் எனது சொந்த கிரிப்டோகரன்சியை உருவாக்கி உள்ளேன். இப்போது அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. லவ் யூ ஆல்..." என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த கிரிப்டோ கரன்சியை பெறுவதற்கான லிங்க் ஒன்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, த்ரிஷாவின் எக்ஸ் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவு பதிவிடப்பட்டுள்ளது. இதுவும் கிரிப்டோகரன்சி குறித்த பதிவு தான். "என்னுடைய புதிய கிரிப்டோகரன்சி $KRISHNAN இப்போது சோலானாவில் கிடைக்கும்" என அதில் என குறிப்பிடப்பட்டுள்ளது.
த்ரிஷா பெயரிலேயே கிரிப்டோகரன்சி உருவாக வாய்ப்பு இல்லை, எனவே இது ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்" என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். யாரும் அந்த லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை த்ரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவரது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,"எனது X பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அது சரிசெய்யப்படும் வரை அதில் வரும் பதிவுகள் என்னுடையது அல்ல... நன்றி" எனத் தெரிவித்துள்ளார். தற்போது வரை த்ரிஷாவின் எக்ஸ் பக்கம் ஹேக்கர்களிடம் இருந்து மீட்கப்படாததால் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications