Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டணியை உடைக்க முயற்சி? கார்த்தி ராஜினாமா செய்வாரா? ஆளூர் ஷாநவாஸ் விளாசல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தி சிதம்பரத்தின் பேச்சு திமுக கூட்டணியை உடைக்கும் முயற்சி என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். இந்தச் செயல்பாடு அப்பட்டமான சுயநலம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் பேசிய கருத்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்குள் ஒரு கலகத்தை உருவாக்கி இருக்கிறது. தேவக்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கார்த்தி, "கூட்டணியில் இருக்கிறோம் என்பதனால் திமுகவிடம் கூனிக் குறுகி நிற்க வேண்டிய தேவை இல்லை" என்று பேசி இருந்தார்.

Karthik Chidambaram Dmk

இதேபோன்று முன்பு ஒருமுறை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை "தமிழகத்தில் எத்தனை நாள் நாம் பிறரைச் சார்ந்து இருக்கப் போகிறோம்? சுயமாக வளர வேண்டாமா?" என்ற ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். அதற்குப் பதிலளித்த இ ஈ வி கே எஸ் இளங்கோவன் திமுக தயவில்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று மேடையிலேயே மறுத்துப் பேசி இருந்தார். அதற்கு காங் மூத்த தலைவர் இளங்கோவன், அவருக்குப் புரியாதது இல்லை என்று விளக்கம் அளித்திருந்தார் செல்வப்பெருந்தகை.

இப்போது மீண்டு கார்த்தி சிதம்பரம் அதே கருத்தை முன்வைத்துள்ளார். செல்வப் பெருந்தகை சிதம்பரம் ஆதரவாளர். ஆகவே இருவரும் ஒரே மாதிரி பேசுகிறார்கள் என்று ஒரு கருத்து அரசியல் வட்டாரத்தில் அடிப்பட்டு வருகிறது. இதனிடையே கார்த்தி பேச்சுக்குப் பதிலளித்த இளங்கோவன், "பல எதிர்ப்பையும் மீறி அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முழுக்க முழுக்க திமுகவினர்தான் அங்கு உழைத்தனர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் யாரும் வேலை செய்யவில்லை. அவர்கள் ஓட்டு கூட போட்டார்களா என்பது தெரியவில்லை. கார்த்தி சிதம்பரத்திற்காக திமுகவினர் வேலை செய்யாமல் இருந்திருந்தால் அவர் வைப்புத்தொகை கூடப் பெற்றிருக்க முடியாது" என்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார். அதற்கு கார்த்தி, "கட்சியின் வளர்ச்சிக்காகவே நான் அப்படிப் பேசினேன். எப்போதோ நடந்த விசயத்திற்கு இளங்கோவன் இப்போது ஏன் பதில் கொடுக்கிறார்?" என்று கேட்டிருந்தார். இந்நிலையில் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், 'இது கூட்டணியை உடைக்கும் முயற்சி' என்று கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை பற்றி ஷாநவாஸ், "கார்த்தி சிதம்பரத்தைப் பொறுத்தவரை என்றைக்கும் அவர் கூட்டணிக்கு ஆதரவாகப் பேசியது இல்லை. கூட்டணிக்கு மட்டுமில்லை, அவர் 'இந்தியா' கூட்டணி கொள்கைக்கு ஆதரவாகக் கூட பேசியதில்லை. அவர்'நீட்' விலக்கு பற்றி என்ன பேசினார் என்பது பலருக்கும் தெரியும். 'நீட்' விலக்கு கேட்டு திமுக அரசு சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியது.

Karthik Chidambaram Dmk

நீட் போராட்டத்திற்கு எதிராகப் பேசிய மாநிலங்கள் கூட இன்று ஆதரவாகப் பேசுகின்ற சூழல் கனிந்துள்ளது. ராகுல்காந்தி கூட நீட் எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அப்படியான நேரத்தில் இவர், நீட் தேர்வை ஆதரித்துப் பேசுகிறார். ஒருமுறை அப்படித்தான் 'திராவிடம்' என்றால் என்ன என்று கேட்டுச் சொல்லுங்கள் எனப் பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறுகிறார். அதை ஏதோ கேலி செய்யும் தொனியில் பேசி இருந்தார் அவர்.

அந்தக் கேள்வியைப் பத்திரிகையாளர்களைப் பார்த்து அவர் கேட்டிருக்க வேண்டிய தேவையே இல்லை. அவரது தந்தை சிதம்பரத்திடம் கேட்டிருந்தாலே அவர் விளக்கம் அளித்திருப்பார். ஆக, அவர் வன்மத்துடன் பல காலமாகப் பேசி வருகிறார் என்பது புரிகிறது. உண்மையில் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? தேர்தல் நேரத்தில் இதைப் பேசி இருக்க வேண்டும்? அப்போது பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துப் பேசு வாக்குகளை வாங்குகிறார். வெற்றி பெற்றுச் சென்றவுடன் அப்படியே மாற்றிப் பேசுகிறார். அதைத்தான் இளங்கோவன் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இப்போது கார்த்தி சிதம்பரம் எம்பி ஆகிவிட்டார். அடுத்து வர உள்ள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதே கூட்டணி பலத்துடன் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றியைப் பாதிக்கக் கூடிய அளவில் ஒரு கருத்தைச் சொல்கிறார்.

காங்கிரஸ் கட்சி பலம் பெற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டால், அதைக் கட்சிக்குள் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் சொல்ல வேண்டும். விவாதிக்க வேண்டும். அதை ஏன் பொதுவெளியில் சொல்கிறார்? அவர் அரசியல் விமர்சகர் இல்லை. கட்சியின் எம்பி. அதை உணர்ந்து விமர்சனத்தைக் கட்சிக்குள் முன்வைக்க வேண்டும். அதுதானே சரியான அணுகுமுறை? நன்றாக உள்ள கூட்டணி உறவுக்குக் குண்டு வைக்கும் விதமாக வெளியேவா பேச வேண்டும்? தேர்தலில் தனக்குச் சீட்டு வேண்டும் என்று கட்சிக் கூட்டத்திற்குப் பேசினாரா? இல்லை மீடியாவில் பேட்டி கொடுக்கும் போது பேசினாரா? தனக்கு ஆதரவாகக் கூட்டணிக் கட்சி ஆதரவாக வேலை செய்ய வேண்டும் என்று அவர் கட்சிக்குள் பேசினாரா? இல்லை பத்திரிகையில் பேசினாரா? அவருக்கு ஒரு தேவை என்றால் கட்சிக்குள் பேசி சீட்டு வாங்குகிறார். அவர் வெற்றி பெற்ற பிறகு வெளியே போட்டு உடைக்கிறார்? இது எவ்வளவு சுயநலம்? இது எப்படிச் சரியாகும்?

காங்கிரஸ் தலைமை தலைவர் பதவிக்கு கார்கேவை நிறுத்தியது. அதை எதிர்த்து சசி தரூர் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது காங்கிரஸ் தலைமையின் கட்டளையை மீறி கார்த்தி சிதம்பரம் சசி தரூரை ஆதரித்தார். கட்சிக்குள் தேர்தல் என்றால் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அது ஜனநாயகம். ஆனால், இன்று கட்சியின் நன்மை பற்றிப் பேசும் இவர் அன்றைக்கு ஒற்றுமைக்காகச் செயல்பட்டாரா? இல்லையே? எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அதற்காகக் கட்சி அவரை நீக்கிவிட்டதா என்ன?

கார்த்தி சிதம்பரத்திற்கு தலைமையின் செயல்பாடு சரியாக இல்லை என்று தோன்றினால் எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியே போய் விமர்சிக்கலாம்? அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. வெற்றி பெற்றும் பதவிக்கு வரும்வரை அமைதியாக இருந்துவிட்டு பிறகு விமர்சிக்க வேண்டிய தேவை என்ன? இது கூட்டணியை உடைக்கும் முயற்சி இல்லையா? அப்படிச் செய்யலாமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+