எழ முடியாத அளவுக்கு அடி.. தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் - டிடிவி சோக ட்வீட்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளில், அமமுக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல், போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோற்றுள்ளது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021ல் திமுக, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார். அண்ணா, கலைஞருக்கு பிறகு திமுக சார்பில் ஸ்டாலின் முதல்வராகிறார்.
தமிழக தேர்தல் வெற்றி முடிவுகள்.. 148 தொகுதிகளில் திமுக வெற்றி.. 60ல் அதிமுக வெற்றி.. முழு நிலவரம்!
ஒரு இடம் கூட இல்லை
அதேசமயம், இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக போன்றவை ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெற முடியவில்லை. மக்கள் நீதி மய்யம் சார்பில், கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் மட்டும் அக்கட்சி லீடிங்கில் இருந்தது. ஆனால், கடைசியில் கமல் தோல்வியடைய, 3 தனி கட்சிகளும் பூஜ்ய நிலையை எட்டின.
பெரும் தோல்வி
இதில், நாம் தமிழர் கட்சி கூட, பல தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்தது. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தின் மிகப்பெரிய மூன்றாவது கட்சியாக இந்த தேர்தலில் தன்னை நிரூபித்துள்ளது. ஆனால், மக்கள் நீதி மய்யமும், அமமுகவும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன. மூன்றுமே பூஜ்யம் என்றாலும், மநீம, அமமுகவுக்கு தேர்தல் முடிவுகள் கடும் அதிர்ச்சியை மட்டும் பரிசாக கிடைத்துள்ளது.
டோட்டல் காலி
அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்டிருப்பது அமமுக தான். கோவில்பட்டியில் போட்டியிட்ட டிடிவி தினகரனே தோல்வியடைந்தார். மற்ற தொகுதிகளில், போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் படுதோல்வியை சந்தித்தனர். அதுவும், சென்னையில், போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் நோட்டாவுடன் அமமுக வேட்பாளர்கள் மல்லுக்கட்டினார். கூட்டணி கட்சியான தேமுதிக நிலைமை அதற்கு மேல் பரிதாபமான நிலையில் உள்ளது. அவர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற, டோட்டலாக காலியானது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். இக்கட்சி செய்த ஒரே காரியம், அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளை திமுகவுக்கு திசைத் திருப்பிவிட்டது தான்.
நெஞ்சார்ந்த நன்றி
இந்த நிலையில், டிடிவி தினகரன் தனது ட்விட்டரில், "மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தலில் களப்பணி ஆற்றிய கழக உடன்பிறப்புகளுக்கும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.