மீண்டும் வந்தாச்சு குக்கர்.. செம திருப்பங்கள்.. இனி பொங்கல்தான்.. டிடிவி தினகரன் செம
சென்னை: பல திருப்பங்களுக்கு பிறகு, பிரஷர் குக்கர் சின்னம் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஆர்.கே.நகரில் யாருக்கு வெற்றி என்று மொத்த இந்தியாவும் உற்று பார்த்தபோதுதான், அதிரடி என்ட்ரி கொடுத்தார் டிடிவி தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக களம் கண்ட டிடிவி தினகரனுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் பிரஷர் குக்கர். திமுக, அதிமுக என பெரும் ஜாம்பவான் கட்சிகள் களம் கண்டதால், டிடிவி தினகரன் வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆர்.கே.நகர் ராசி
இது எல்லாமும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரைதான். திமுகவை டெபாசிட் இழக்க வைத்து, அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்து, ஜெயலலிதாவின் தொகுதியை எளிதாக வென்றார் டிடிவி தினகரன். பிரஷர் குக்கர் ராசிதான் இத்தனைக்கும் காரணம் என புழகாங்கிதம் அடைந்தனர் அவர் ஆதரவாளர்கள்.

பறிபோன குக்கர் சின்னம்
ஆனால், 2 வருஷம்தான். 2019ல், தமிழகத்தில் நடந்த 13 தொகுதி இடைத் தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் போட்டியிட ஏதுவாக பொதுச் சின்னமாக குக்கர் சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக் கோரி, டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதிமுக தரப்பின் எதிர்ப்பை பரிசீலித்த நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்தது.

சின்னம் முக்கியம்
இந்த தேர்தலில் தினகரன் கட்சிக்கு 'பரிசுப் பெட்டி' சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் அதிர்ச்சி தோல்விகள் பரிசாக கிடைத்தன. அப்போதுதான் புரிந்தது, குக்கர் சின்னத்தின் முக்கியத்துவம். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே, இழந்து போன இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடமிருந்து மீட்டவர் ஜெயலலிதா என்பார்கள் (1991 தேர்தலுக்கு முன்பு). இரட்டை இலை சின்னம்தான் இப்போதும் அதிமுக வெற்றிக்கு முதுகெலும்பாக உள்ளது. இப்போது அதே மாதிரி ஒரு திருப்புமுனை தினகரனுக்கும் நடந்துள்ளது.

மீண்டும் வந்தது குக்கர்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு அமமுக சின்னமான பிரஷர் குக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் செம குஷியில் உள்ளது தினகரன் தரப்பு. இடைத் தேர்தல் நடந்தபோது, பிரஷர் குக்கர் சின்னத்தை அமமுகவுக்கு வழங்க கூடாது என்று, 300 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையம் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது. அப்படி தடை போட்ட ஒரு சின்னம் இப்போது, மறுபடியும் தினகரன் கைக்கு வந்துள்ளது என்றால் சும்மாவா?

மகிழ்ச்சியில் டிடிவி தினகரன்
சட்டசபை தேர்தலுக்கு முன்பு சசிகலா ரிலீஸ் ஆவார் என்கிறார்கள். அதன்பிறகு அதிமுகவில் நிலவரம் எப்படி மாறுமோ தெரியாது. ஆனால், அமமுக தேர்தலில் போட்டியிடும் நிலைமை வந்தால், பிரஷர் குக்கர் கண்டிப்பாக பிற கட்சிகளுக்கு பிரஷரை ஏற்றும் என்பது மட்டும் நிச்சயம். ஏன்னா.. அந்த சின்னத்தின் ராசி அப்படி. எதிர்பார்க்காததை செய்யும் சின்னம் அது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இதனால்தான் உள்ளுக்குள் பூரிப்பில் இருக்கிறது டிடிவி தினகரன் தரப்பு.












Click it and Unblock the Notifications