அமித்ஷா என்னை சந்திக்க அழைக்க மாட்டார்.. நானும் சந்திக்க மாட்டேன்.. ஓபனாக அறிவித்த டிடிவி தினகரன்!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னை சந்திக்க அழைக்க மாட்டார்.. அப்படி அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை, என்டிஏ கூட்டணியில் இணைய மாட்டேன் என்று கூறிய டிடிவி தினகரன், இந்த தேர்தலில் துரோகம் உறுதியாக வீழ்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
2 மாதங்களுக்கு முன்னதாக என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன், 2026ல் துரோகத்தை வீழ்த்தும் வகையில் கூட்டணி அமைப்போம் என்று கூறினார். அதேபோல் விஜய்யை தொடர்ந்து பாராட்டி நெருக்கம் காட்டி வந்தார்.

இதனிடையே முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அண்ணாமலை ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தனர். அதன்பின் ஓபிஎஸ் தரப்பில், தனிக்கட்சி தொடங்குகிறேன் என்று எப்போதும் சொல்லவில்லை.. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியதாக அதிர்ச்சி கொடுத்தார்.
இதனால் விரைவில் டிடிவி தினகரனும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தேர்தல் நெருங்கும் போது என்டிஏ கூட்டணியில் மீண்டும் அமமுக சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார்.
இதன்பின் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் அமித்ஷாவை சந்திப்பதற்கான வாய்ப்பு உறுதியாக இல்லை.. என்னை அழைக்கவும் மாட்டார்கள். நானும் சந்திக்க மாட்டேன்.. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை என்டிஏ கூட்டணியில் அமமுக இணையாது. அதிமுகவை அமித்ஷா இயக்குகிறாரா என்று தெரியாது.
இந்த தேர்தலில் உறுதியாக துரோகத்தை வீழ்த்தப்படும். அதில் அமமுகவின் பங்கு நிச்சயம் இருக்கும். அமமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. கூட்டணி உறுதியான பின் வெளியில் சொல்வதுதான் மரியாதையாக இருக்கும். அதேபோல் திருப்பரங்குன்றத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்திற்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்த எந்த இயக்கம் நினைத்தாலும், மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். மேலும், ஜனவரி மாதம் அமமுக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இதனால் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications