"டிஜிபி நேரடியாக தலையிட வேண்டும்".. நியாயம் கேட்கிறார் டிடிவி தினகரன்.. பற்றி எரியும் முதுகுளத்தூர்
மாணவன் மணிகண்டன் மரண விசாரணை தொடர்பாக கோரிக்கை விடுக்கிறார் டிடிவி தினகரன்
சென்னை: கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில், டிஜிபி நேரடியாக தலையிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் நீர்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்.. இவர் ஒரு கல்லூரி மாணவர்.. இந்நிலையில் நேற்றைய தினம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக மணிகண்டன் டூவீலரில் வந்துள்ளார்.
அவரை தடுத்து நிறுத்தியபோது, மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீஸார், அவரை விரட்டிக் கொண்டு சென்று, சுற்றி வளைத்து பிடித்து அடித்து உதைத்ததாகவும், அதன்பிறகு ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக கொண்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

உறுதி
இதையடுத்து மணிகண்டன் விசாரணைக்கு பிறகு வீடு திரும்பிய நிலையில், வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.. பலமுறை ரத்த வாந்தியும் எடுத்துள்ளார்.. இதனால் பதறி போன உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்துள்ளனர்... அவர்கள் வந்து பரிசோதித்தபோது, மணிகண்டன் இறந்ததை உறுதி செய்தனர்... இது குறித்து முதுகுளத்தூர் டிஎஸ்பியிடம், மணிகண்டனின் உறவினர்கள் புகார் அளித்தனர்.

குற்றச்சாட்டு
டிஎஸ்பி உத்தரவின்பேரில், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.. இதனிடையே, போலீசார் மணிகண்டனை அடித்து துன்புறுத்தியதால்தான் இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்... ஆனால், போலீஸ் தரப்பிலோ, பாம்பு கடித்து இறந்திருக்கலாம் என்று விளக்கம் தந்தனர்.. அந்த விளக்கத்தை உறவினர்கள் ஏற்க மறுத்து, முதுகுளத்தூர், பரமக்குடி சாலையில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

மரணம்
இதையடுத்து ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திருமலை மற்றும் முதுகுளத்தூர் காவல்துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் நேற்றில் இருந்து அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், மணிகண்டன் மரணம் குறித்து #JusticeForManikandan என்ற ஹேஷ்டேக் ட்ரண்ட் ஆகி வருகிறது.

எஸ்பி கார்த்திக்
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி கார்த்திக் விளக்கம் தந்திருந்தார். அதில் மாணவர் மணிகண்டன் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார் என்று சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையில்லை, அவருக்கு அறிவுரை சொல்லியே போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்" என்று கூறியதுடன், விசாரணைக்கு அழைத்து வந்த மாணவன் மணிகண்டனை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றதற்கான கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.

கையொப்பம்
அந்த கடிதத்தில், "நான் நீர் கோழியேந்தல் கிராமத்தில் குடியிருந்து வருகிறேன். நான் விவசாய வேலை செய்து பிழைத்து வருகிறேன். இன்று (04-12-21)ம் தேதி கீழ்த்தூவல் காவல் நிலையத்தில் எனது மகன் மணிகண்டன் விசாரணைக்காக இருந்தவரை இன்று இரவு நேரம் என்பதால் நாளை காலை 10 மணிக்கு தாங்கள் முன் தவறாமல் ஆஜர்படுத்துகிறேன். எனது மகன் மணிகண்டன் இன்று (04-12--21)ஆம் தேதி 20.00 மணிக்கு நானும் எனது உறவுக்காரர் குமரையா மகன் இராமலிங்கம் ஆகிய இருவரும் நல்ல நிலையில் அழைத்து செல்கிறோம்" என அதில் எழுதப்பட்டிருந்ததுடன், மணிகண்டனின் தந்தை ராமலட்சுமணனின் கையொப்பமும் இடம் பெற்றிருந்தது.

ட்வீட்
இந்நிலையில், இந்த மர்ம மரணம் தொடர்பான உரிய விசாரணை வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.. இது தொடர்பான ட்வீட்டில், "முதுகுளத்தூர், மேலத்தூவல் கிராமத்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.. இந்நிகழ்வில் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால் இதுகுறித்து டி.ஜி.பி. நேரடியாக தலையிட்டு, விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்திடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என ட்வீட் செய்துள்ளார்












Click it and Unblock the Notifications