சின்னம்மா தலைமையில் சட்டமன்றத் தேர்தல் பணிகள்... நிர்வாகிகளுக்கு தெம்பூட்டும் டி.டி.வி.தினகரன்
சென்னை: சின்னம்மா சசிகலா தலைமையில் தான் நாம் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என அமமுக நிர்வாகிகளுக்கு உற்சாகம் அளித்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
சசிகலா விடுதலையை மையமாக வைத்து பட்டிமன்றங்கள் நடத்தாத குறையாக அதைப்பற்றி விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கிற்கு பின்பு கட்சியினர் சோர்வடைவதை உணர்ந்த தினகரன் அவர்களை உற்சாகப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் கூட இல்லாத நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அது தொடர்பான பணிகளில் முழு கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளன. திமுக பிரசாந்த் கிஷோர் குழுவுடன் இணைந்து தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. பதிலுக்கு அதிமுகவும் தேர்தல் உத்தி வகுப்பாளர் சுனில் குழுவை வைத்து திமுகவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் பாஜகவும் தனது பங்குக்கு அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கு
இந்நிலையில் கடந்த 4 மாத காலமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகவும் அமைதி காத்து வருவது அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ''அண்ணனுக்கு என்னாச்சு, அவர் அமைதி காப்பதன் நோக்கம் என்ன, சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறோம்'' என ஆளாளுக்கு தங்களுக்கு தெரிந்த மாநில நிர்வாகிகளிடம் கேள்விக்கணைகளை வீசத் தொடங்கினர். அவர்களும் இதை டிடிவி தினகரன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல்
சிறையில் இருக்கும் சசிகலா (சின்னம்மா)சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விடுதலையாவது உறுதி, ஆகையால் அவர் தலைமையில் நாம் தேர்தலை சந்திப்போம் என்பது தினகரனின் பதிலாக இருந்துள்ளது. இதனிடையே அவரது அமைதிக்கும், நடவடிக்கைகளில் மாற்றத்திற்கும் சுப்பிரமணியசாமி கொடுத்த ஆலோசனையும் ஒரு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தீவிரம் புரியாமல்
தினகரனின் திடீர் அமைதி குறித்து அமமுக மாநில நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு பேசிய போது, ''கொரோனா வைரஸின் வீரியத்தை உணர்ந்தே சார் அமைதி காத்து வருகிறார். மற்றபடி நீங்கள் கூறியதெல்லாம் காரணமில்லை. அரசியலை பொறுத்தவரை எப்போது என்ன செய்ய வேண்டும் என்று எங்க சாருக்கு நல்லா தெரியும். ஒன்று மட்டும் உண்மை, சின்னம்மா விரைவில் விடுதலையாவது மட்டும் உறுதி'' என பதில் கிடைத்தது.












Click it and Unblock the Notifications