ஓபிஎஸ் பக்கம் சாயும் டிடிவி தினகரன்.. எடப்பாடிக்கு எதிராக கருத்து - மேட்டர் அப்படி போகுதா?
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமெடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி உடனான கூடா நட்பின் பலனை ஓ.பன்னீர்செல்வம் தற்போது அனுபவித்துகொண்டிருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.
ஜெயலலிதா மரணத்துக்கு பின் முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக நடத்திய தர்ம யுத்தத்தை தொடர்ந்து, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டர் எடப்பாடி பழனிசாமி.
பல மாதங்களாக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக 2 பிரிவுகளாக செயல்பட்ட நிலையில், டெல்லியின் தலையீட்டால் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை நிறுத்திவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

இரட்டை தலைமை
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவே தொடர, அதிமுகவின் பொதுச்செயலாளராக யாரும் பொறுப்பேற்காமல் இருந்தனர். அதன் பின்னர் கட்சியின் புதிய உயர் பதவியாக ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு அது ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கப்பட்டன.

உட்கட்சி மோதல்
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிகாலம் நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார். இருப்பினும் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளுக்கு இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்துக்கு வருவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மோதல் ஏற்பட்டது.

ஒற்றைத் தலைமை
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது. அப்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு உள்ளேயே ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டனர். ஒற்றை தலைமை குறித்து முழக்கங்களும் எழுப்பட்டன. அதன் பின்னர் இபிஎஸ் ஆதரவாளர் என்று கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதை வெளியே வந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசியதால் இப்பிரச்சனை பூதாகரம் எடுத்தது.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
கடந்த 16 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம், இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று கூறினார். இந்த நிலையில் இன்று காலை அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் இருந்தபோது வெளியே குழுமி இருந்த அவரது ஆதரவாளர்களுக்கும் ஜெயக்குமார் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

மூத்த நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ் - ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசி வருகிறார். அத்துடன் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை அதிமுகவில் மூத்த நிர்வாகியான பன்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை கேட்டுப்பெற்று இருக்கிறார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சந்தித்து இருக்கிறார்.

டிடிவி தினகரன் கருத்து
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயாளர் டிடிவி தினகரன், "தவறானவர்கள் கையில் கட்சி மற்றும் சின்னம் உள்ளது. கூடா நட்பின் பயனை ஓ.பன்னீர்செல்வம் தற்போது அனுபவித்து வருகிறார். வியாபார நோக்கிலேயே அதிமுக தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்களே பாடத்தை புகட்டுவார்கள். நேரம் வரும்போது கட்சியை நாங்கள் மீட்டு எடுப்போம்." என்றார்.

சசிகலாவுக்கு ஓ.பி.எஸ். ஆதரவா?
சில மாதங்கள் முன்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி மாவட்ட அதிமுகவினர், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தகவல்கள் கசிந்து வந்தன. ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதர் ஓ.ராஜாவும் சசிகலாவை நேரில் சென்று சந்தித்தார். சசிகலாவுக்கு எதிராக தொடக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் செய்தாலும், அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள், தங்கள் ஆதரவாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இரு தரப்புக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவுவதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications