யோக்கியர், சுயநல புலி.. ஜெ. ஸ்டைலில் இறங்கிய தினகரன்.. மு.க.ஸ்டாலின் மீது அனல் பாய்ச்சல்.. !
மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கடுமையாக பதிலளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுகவின் முரசொலி கடுமையான தலையங்கம் தீட்ட இப்போது அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக தாக்கி அறிக்கை விட்டுள்ளார்.
தினகரனும், ஸ்டாலினும் கூட்டுக்களவாணிகள் என்று அதிமுக விமர்சித்து வந்தது. ஆனால் செந்தில்பாலாஜி திமுகவில் சேர்ந்ததில் இருந்தே, அதிகம் விமர்சித்து கொள்ளாத தினகரனும் ஸ்டாலினும் ஒருவரையொருவர் தூற்ற ஆரம்பித்துள்ளார்கள்.
நேற்று முரசொலி தலையங்கத்தில் தினகரனை திருடன் அதாவது 420 என விமர்சனம் செய்திருந்தனர். நிறைய விளக்கங்களையும், தினகரன் மீதான அவநம்பிக்கையையும் தெரிவித்து மிக நீண்ட ஒரு கட்டுரை முரசொலியில் நேற்று இடம் பிடித்தது.
|
5 ட்வீட்கள்
இதற்கு டிடிவி தினகரன் தனது ட்விட்டர் மூலமாகவே பதில் அளித்துள்ளார். ஒன்றல்ல, இரண்டல்ல, 5 ட்விட்டர் பதிவுகளை போட்டு தனது ஆற்றாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த பதிவுகள் இவைதான்:
|
சுயநல புலி ஸ்டாலின்
"கட்சியை, மக்களைக் காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று எவனாவது சொன்னால் நம்பாதே, அவனது இன்றைய நிலையை ஆராய்ந்து பார், அவன் தியாகியா அல்லது தகுதியைத் தாண்டிய செல்வந்தனா என்பது புரியும். அதிலும் தன் குடும்பம், பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அவன் சுயநலப் புலிதான் என்றார் பெரியார்.
|
யோக்கியர் ஸ்டாலின்
திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம்பரியத்திலிருந்து வந்து, இன்றைக்கு ஆசியப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்டாலின் தான் அந்த சுயநலப் புலி! லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால் உருவான பல நூறு கோடி மதிப்புள்ள முரசொலி அறக்கட்டளைக்கு தனது மகனை அறங்காவலராக நியமித்த யோக்கியர் ஸ்டாலினைப் பற்றித்தான் 55 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இப்படிச் சொன்னார் போலும்.
|
பதுங்குவது ஏன்?
லட்சம் கோடி மதிப்பிலான 2ஜி ஊழல் வழக்கில் தனது தங்கையை, தாயை சிறைக்கும் விசாரணைக்கும் அனுப்பி வைத்த இந்த சுயநலப்புலிதான் இன்று மற்றவர்களின் தரம் பற்றி பேசுகிறது. பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் அரா மீனைப் போல, தேர்தலுக்கான கூட்டணிக்கு காங்கிரஸ்; தேர்தலுக்குப் பிறகான கூட்டணிக்கு பிஜேபி என வேஷமிடும் அரா மீன் ஸ்டாலின், அயிரை மீனைப் பார்த்து பயந்து பதுங்குவது ஏன்..?"
|
தனிப்பட்ட சண்டைகள்
இவ்வாறு டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார். திருவாரூர் மட்டுமல்லாது வரும் தேர்தலில் தமிழகம் முழுக்க திமுக, அமமுக இடையேதான் உண்மையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கூல் தலைவர் என்று பெயரெடுத்த தினகரனின் இந்த அதிரடி ட்வீட்டுகள் திமுக தரப்பை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அரசியல் விமர்சனம் என்பதையும் தாண்டி இவர்கள் இருவரது தனிப்பட்ட சண்டைகள்தான் பெரும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.

சீண்டல்.. பாய்ச்சல்
இப்படித்தான் சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்த்தை மிகக் கடுமையாக சித்தரித்து முரசொலியில் கட்டுரை வெளியானது. இது ரஜினிகாந்த்தை அதிர வைத்தது. இதையடுத்து இதுபோல இனி நடக்காது என்று திமுக தரப்பிலிருந்து ரஜினிக்குத் தெரிவிக்கப்பட்டு சமாதானத்தில் இறங்கினர். இந்த நிலையில் தற்போது தினகரனை சீண்ட ஆரம்பித்துள்ளது முரசொலி.. பதிலுக்கு தினகரனும் பாய ஆரம்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications