"பணி சிறக்கட்டும்.." சாகித்ய அகாடமி விருது பெற்ற மு.ராஜேந்திரனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
சென்னை: மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை இந்தாண்டு வென்ற மு.ராஜேந்திரனுக்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தலைசிறந்த படைப்புகளுக்காக சாகித்ய அகாடமி விருதுகளை அறிவித்து வருகிறது. இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகும்.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ராஜஸ்தானி, உருது, சிந்தி என மொத்தம் 24 மொழிகளில் வெளியாகும் நூல்களில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் எழுத்தாளர்களுக்கு இந்த சாகித்ய அகாடமி விருதுகள் அளிக்கப்படும்.

சாகித்ய அகாடமி விருது
இந்த சாகித்ய அகாடமி விருதுகளைப் பெறுவோருக்குத் தாமிர பட்டயம் விருதும் ரூ.1,00,000 ரொக்கமும் வழங்கப்படும். இதற்கிடையே இந்தாண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது. அதில் 'காலாபாணி' நாவல் 2022ஆம் ஆண்டின் தமிழ் படைப்புக்காக சாகித்ய அகாடமி விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலை மு.ராஜேந்திரன் எழுதியுள்ளார்.

டிடிவி தினகரன் வாழ்த்து
சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற மு.ராஜேந்திரனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அமமுக தலைவர் டிடிவி தினகரனும் மு. ராஜேந்திரனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், எழுத்தாளருமான முனைவர் மு.ராஜேந்திரன் அவர்களுக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு சிறந்த நூல்களைப் படைத்துவரும் அவரது பணி சிறக்கட்டும். தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மேலும் பல நூல்களை அவர் படைக்கட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

யார் இந்த மு.ராஜேந்திரன்
இந்த காலாபாணி நாவலை எழுதிய மு.ராஜேந்திரன் மதுரை மாவட்டம் வடகரை கிராமத்தில் பிறந்தவர். தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்றில் தீவிர ஆர்வம் கொண்ட இவர் படித்ததோ ஆங்கில இலக்கியம்.. அதில் முதுகலைப் பட்டம் வரை பெற்றுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பும் படித்த இவர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளில் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார்.

காலாபாணி நாவல்
இவரது இந்த காலாபாணி நாவல் நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். 1801இல் சுமார் 6 மாதங்கள் நடந்த காளையார் கோவில் போர் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டது. இந்த நாவலில் அன்றைய தமிழர்களின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்த நாவலுக்கு ஏற்கனவே, பல்வேறு டான்சீறி சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications