நோட்டாவுடன் நேரடி போட்டி.. தலைநகரில் தலை மூழ்கிய அமமுக - வேற லெவல் 'டிஸைன்'
சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்க முன்னேற்ற கழகம், நிச்சயம் இப்படியொரு தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்திருக்காது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று (மே.2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக வலிமையான எதிர்க்கட்சியாக அமரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாண்டு காலம் அதிகாரத்தில் இல்லாத நிலையில், மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மயான அமைதி நிலவுகிறது.

அதிமுக டவுன்
பிற்பகல் 3 மணி நிலவரப்படி, மொத்தம் 234 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், 153 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 80 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு தொகுதியில் மட்டும் முன்னிலை பெறுகிறது.

பின்தங்கிய டிடிவி
இந்த நிலையில், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்த தேர்தலில் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது. டிடிவி தினகரன் தான் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியிலேயே பின்தங்கி இருக்கிறார். அக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் மிகவும் குறைவான வாக்குகளே பெற்று பின்தங்கி இருக்கின்றனர்.

நோட்டாவுடன் போட்டி
குறிப்பாக, சென்னையில் போட்டியிட்ட பல தொகுதிகளிலும் 1000 வாக்குகளை கூட அமமுக பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் சில தொகுதிகளில், அமமுக வேட்பாளர்களுக்கும், நோட்டாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக கட்சிகளை பதறவைத்து ஆர்.கே.நகரில் வென்று காட்டிய டிடிவி தினகரனின் அமமுக, தற்போது அதே தொகுதியில், 6 சுற்றுகளின் முடிவில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 469. நோட்டாவில் பதிவான வாக்குகள் 313.

கலக்கும் நாம் தமிழர்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், அமமுக வேட்பாளர் இதுவரை பெற்றுள்ள வாக்குகளின் எண்ணிக்கை வெறும் 406. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கெமிலஸ் செல்வா கூட இங்கு 4932 வாக்குகளை பெற்றுள்ளார்.

நோட்டாவுக்கு கீழ்
அமமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக வேட்பாளர்களும், நோட்டாவுடன் தான் மோதுகின்றன. 7 சுற்று எண்ணிக்கை முடிவில் வில்லிவாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 353. நோட்டா 316. திரு.வி.க தொகுதியில், நோட்டாவை விட தேமுதிக வேட்பாளர் சேகர் குறைவான வாக்குகளே பெற்றிருக்கிறார். எழும்பூரிலும் இதே நிலைமை தான். ராயபுரம், துறைமுகம் போன்ற தொகுதிகளில் 500 வாக்குகளை கூட இதுவரை அமமுக தாண்டவில்லை. ஒட்டுமொத்தமாக தலைநகரில் தலை மூழ்கியிருக்கிறது அமமுக.












Click it and Unblock the Notifications