தூத்துக்குடி; அன்று திருச்செந்தூர் அதிகாரி... இன்று சாத்தான்குளம் தந்தை, மகன்... நீதி கேட்கும் திமுக
சென்னை: கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் கோயில் அதிகாரி மரணத்திற்கு நீதி கோரி கருணாநிதி நெடும்பயணம் மேற்கொண்ட நிலையில், இன்று சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்திற்கு நீதி கோரி வருகிறது திமுக.
திருச்செந்தூர் கோயில் அதிகாரி மர்ம மரணத்தால் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி ஏற்பட்டது போல், இன்று சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடி அளித்து வருகின்றன.
இதில் குறிப்பிடவேண்டிய விவகாரம் என்னவென்றால் திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய இரண்டு ஊர்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் உள்ளன.

அனல் பறக்கும் அரசியல்
தமிழக அரசியலில் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் அதிமுகவுக்கும் ஏழாம் பொருத்தம் என்று கூறும் அளவுக்கு பல்வேறு நிகழ்வுகள் அங்கு அரங்கேறியுள்ளன. சாத்தான்குளம் தந்தை மகன் மரணம், ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச் சூடு, வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர், திருச்செந்தூர் கோயில் அதிகாரி மர்ம மரணம், சாதிய மோதல்கள் என அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை பட்டியலிடலாம்.

திருச்செந்தூர் கோயில்
இந்நிலையில் 1982-ம் ஆண்டு திருச்செந்தூர் கோயில் அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தை கையில் எடுத்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, நீதி கேட்டு மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நடைபயணம் மேற்கொண்டார். 8 நாட்கள் அவர் மேற்கொண்ட இந்த நடைபயணம் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு அப்போதைய அதிமுக ஆட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

கொலை
1982-ல் திருச்செந்தூர் கோயில் அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை தற்கொலை செய்துகொண்டதாக அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில், அதனை விசாரிக்க அமைக்கப்பட்ட சி.ஜே.ஆர். பால் தலைமையிலான ஆணையம் நடந்தது கொலை என அறிக்கை சமர்பித்தது. அதனை சட்டமன்றத்தில் வெளியிடக் கோரியும் வெளியிடப்படாததால், பால் அறிக்கையை திடீரென வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட அறிக்கை எதிர்க்கட்சி தலைவர் கைக்கு சென்றதால் அப்போது அரசியலில் அனல் பறந்தது.

பல்முனை அழுத்தம்
இந்நிலையில் அதே தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் மரணத்திற்கு நீதி கோரி தொடர் அரசியல் அழுத்தம் அளித்து வருகிறது திமுக. இதனை கடந்த 38 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வோடு ஒப்பிட வேண்டியது காலத்தின் அவசியமாகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாத்தான்குளம் விவகாரத்தில் அடுக்கடுக்கான அறிக்கைகள் வெளியிட்டு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதோடு, கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரடியாகவே களமிறக்கி பாதிக்கப்பட்டோர் குடும்பத்தை சந்திக்க வைத்தார்.

சட்ட அமைச்சர்
இதனிடையே ஏழையின் கண்ணீர் கூரிய வாளுக்கு சமம் என அறிக்கை வெளியிட்டுள்ள சட்டத்துறை அமைச்சர், சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யாரையும் காப்பாற்ற வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல எனவும் உறுதியளித்துள்ளார். அந்த வகையில் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், கொலை வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications