விஜய் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் சர்ச்சை.. நடந்தது என்ன? ஆதவ் அர்ஜுனா விளக்கம்
சென்னை: விஜய் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் சர்ச்சை குறித்து தவெக விளக்கம் அளித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி வாழ்த்துப்பாடலே முதலில் இசைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என தவெக ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளது. இனி வரும் காலங்களில் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் முதல்வராக இன்று தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். விஜய் முதல்வராக பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆதவ் அர்ஜுனா விளக்கம்
திமுக, விசிக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும், விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின. குறிப்பாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்த திருமாவளவனும் என்ன நடந்தது என விளக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிலையில் தவெக நிர்வாகி ஆதவ அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும்.
தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது
நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.
இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது.
தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை. இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
எங்கள் உறுதியான நிலைப்பாடு இது தான்
அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான்" என்று கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications