பெரம்பூர் பிரசாரம் நாளை ரத்து.. போட்டியிடும் தொகுதியிலேயே திடீரென பின்வாங்கிய விஜய்.. என்ன காரணம்?
சென்னை: சென்னை பெரம்பூர் சட்டசபை தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். நாளை பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இதற்கு காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் தான் திடீரென்று விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் சட்டசபை தொகுதியிலேயே பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். இதனால் தவெகவினர் சோர்வடைந்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றார். ஒன்று சென்னை பெரம்பூர். இன்னொன்று திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியாகும். தேர்தல் தேதி நெருங்கிவிட்டது. ஏப்ரல் 23ல் தேர்தல் நடக்கும் நிலையில் ஏப்ரல் 21ம் தேதியுடன் பிரசாரம் முடிவுக்கு வர உள்ளது.
இதனால் தலைவர்கள், கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் சட்டசபை தொகுதியில் நாளை பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.
வீடு வீடாக வாக்கு சேகரிக்க முடிவு
இதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. போட்டியிடும் தொகுதி என்பதால் வழக்கமான பரப்புரை, ரோடுஷோ ஆகியவற்றுக்கு பதில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது. காவல்துறையும் அனுமதி வழங்கி இருந்தது. இதனால் விஜய் நாளை வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தயாரானார்.
நாளைய பிரசாரம் ரத்து
நாளைய பிரசாரத்தையொட்டி இன்றே விஜய் பெரம்பூரில் உள்ள தேர்தல் பணிமனைக்கு சென்று பெண் நிர்வாகிகளுடன் சேர்ந்து கட்சியின் சின்னமான 'விசில்' சின்னத்தை வரைந்தார். தனித்தனியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் தான் திடீரென்று பெரம்பூரில் விஜயின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தவெக சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications