ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது நேரடி அட்டாக்.. தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் சொன்ன வார்த்தை.. கவனிச்சீங்களா!
சென்னை: சிபிஐ என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கைப்பாவையாக உள்ளதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். பாஜகவை கொள்கை எதிரி என்று விமர்சித்து வந்த விஜய், முதல்முறையாக ஆர்எஸ்எஸ் அமைப்பை அட்டாக் செய்திருக்கிறார். இது தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய போதே அரசியல் எதிரியாக திமுகவையும், கொள்கை எதிரியாக பாஜகவையும் விஜய் அறிவித்தார். அப்போது முதலே திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் பெயரை உச்சரிப்பதை தவிர்த்து வந்தார். ஒரு கட்டத்தில் லியோவை பார்க்க வேண்டும் என்று சொன்னீர்களே என்று பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.

அதேபோல் மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக - பாஜக கூட்டணியில் தவெகவை இணைக்க முயற்சிகள் நடப்பதாக கூறி இருந்தார். ஆனால் தவெக செயற்குழு கூட்டத்தில், ஒருபோதும் திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று தீர்மானத்தை விஜய் நிறைவேற்றினார். இந்த நிலையில் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தவெக சார்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசுகையில், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை விமர்சித்துள்ளார். அதிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பை விஜய் விமர்சித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இதுதொடர்பாக விஜய் பேசுகையில், சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் லாக் அப் மரண வழக்கை, சிபிஐக்கு மாற்றியது காவல்துறைக்கு அவமானம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது திமுகவும் அதனைத்தான் செய்திருக்கிறது.
அதே ஆர்எஸ்எஸ், பாஜகவின் கைப்பாவையாக உள்ள சிபிஐ வசம் தான் ஒப்படைத்திருக்கிறது. நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என்று தவெக கோரியதால்தான், நீங்கள் சிபிஐ பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாக சிபிஐ இருப்பதாக விமர்சித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இதன் மூலமாக பாஜகவின் பி டீம் விஜய் என்று திமுகவினர் கூறி வந்த விமர்சனம் பொய்த்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் செய்ய வேண்டிய ஆர்ப்பாட்டத்தை தவெக தலைவர் விஜய் முன்னின்று நடத்தி இருப்பது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications