ஆளுநரிடம் அடம்பிடித்த விஜய்.. பதவியேற்பு கடிதம் தந்தால் தான் போவேன்.. கவர்னர் மாளிகையில் பிடிவாதம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். முன்னதாக நேற்று அவர் கவர்னர் மாளிகையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் 4
எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினார். இந்த வேளையில் ஆளுநர் செய்த செயலால் விஜய் அதிர்ச்சியடைந்ததோடு, பதவியேற்பு விழாவிற்கான கடிதம் தந்தால் தான் போவேன் என்று அடம்பிடித்து கவர்னர் மாளிகையில் காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தில் மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதில் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதனால் தவெகவின் பலம் 107 எம்எல்ஏவாக (விஜய் ஒரு தொகுதியில் வென்றதை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அது சேர்க்கப்படவில்லை)உள்ளது.
இதனால் மெஜாரிட்டிக்கான 118 எனும் மேஜிக் நம்பரை பெற 12 எம்எல்ஏக்கள் குறைவாக இருந்தனர். பிற கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை குறிவைத்து அவர் ஆதரவு கோரினார். அதன்படி காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவிற்கு ஆதரவு வழங்கியது. இனி வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்ற தேர்தல்களில் தவெக உடன் கூட்டணி என்று காங்கிரஸ் அறிவித்தது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவிற்கு கிடைத்தது.
அதன்பிறகு நேற்று முன்தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரிப்பதாக கூறின. இந்த 2 கட்சிகளுக்கும் தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளன. இதனால் தவெகவிற்கான பலம் 116 ஆக அதிகரித்தது. அதன்பிறகு இன்று விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் 4 எம்எல்ஏக்களும் விஜய்க்கு வெளியில் இருநது ஆதரவு கொடுத்தனர். இதனால் சட்டசபையில் விஜய்யின் பலம் 120 ஆக அதிகரித்தது. இது ஆட்சியமைக்க தேவையான 118 எம்எல்ஏக்களை விட 2 அதிகமாகும். இதன்மூலம் விஜய் மெஜாரிட்டியை பெற்றார்.
அதன்பிறகு நேற்று 4வது முறையாக விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் 4 எம்எல்ஏக்களின் ஆதரவை நேற்று பெற்ற விஜய் அந்த கடிதங்களை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து வழங்கினார்.
அப்போது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களை பார்த்திருந்த நிலையில் புதிதாக வழங்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வழங்கிய கடிதங்களை சரிபார்க்கும்படி கூறினார். இதனால் விஜய் ஒரு நிமிடம் திக்திக் மனநிலைக்கு சென்றார்.
ஏனென்றால் நேற்று முன்தினம் விஜய் வழங்கிய ஆதரவு கடிதத்தில் அமமுகவின் மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் பெயர் சேர்க்கப்பட்டது. ஆனால் அத போலியான கடிதம் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். அதேபால் காமராஜ்யும், தவெகவிற்கு ஆதரவு கடிதம் வழங்கவில்லை என்று கூறினார். இதுபற்றி டிடிவி தினகரன் மற்றும் காமராஜ் ஆகியோர் ஆளுநரை சந்தித்து புகாரளித்து இருந்தனர். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் தான் சந்தேகம் அடைந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று விஜய் வழங்கிய விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களை வாங்கியதும் அதனை சரிபார்க்கும்படி கூறினார். அப்போது கடிதங்கள் சரியாக இருப்பதை ஆளுநர் உறுதி செய்தார். மேலும் விஜய்க்கு ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை பலம் கிடைத்ததை உணர்ந்தார்.
இதையடுத்து தான் பதவியேற்பு விழாவுக்கான தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடும்படி விஜய்யிடம், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறினார். அதன்பிறகே இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து பதவியேற்புக்கான கடிதத்தை ஒரு மணிநேரத்தில் அனுப்பி வைப்பதாக ஆளுநர் தெரிவித்தார். அதற்கு விஜய், கடிதம் கிடைக்கும் வரை இங்கேயே காத்திருந்து வாங்கி செல்வதாக கூறினார். அதில் உறுதியாக நின்றார். இதையடுத்து அவர் ஆளுநர் மாளிகையில் காத்திருந்து பதவியேற்பு விழாவுக்கான கடிதத்தை கையோடு பெற்று புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications