தவெகவில் ஐக்கியமாகும் பிரவீன் சக்ரவர்த்தி? விஜய்யுடன் நடந்த சந்திப்பின் பின்னணி இதுதான்!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் டேட்டா மற்றும் அனலிட்டிக்ஸ் பிரிவு தலைவரான பிரவீன் சக்ரவர்த்தி தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தவெக தலைவர் விஜய்யை சந்தித்ததை ஒப்புக் கொண்ட பிரவீன் சக்ரவர்த்தி மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் டேட்டா மற்றும் அனலிடிக்ஸ் பிரிவின் தலைவரான பிரவீன் சக்ரவர்த்தி நேற்று தவெக தலைவர் விஜய்யை சந்தித்தார். கடந்த வாரமே விஜய்யை பாராட்டி சில பதிவுகளை வெளியிட்டிருந்த பிரவீன் சக்ரவர்த்தி, திடீரென விஜய்யை சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசித்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு மேல் வேறு எதுவும் கூற முடியாது என்று அவர் கூறி இருக்கிறார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருக்கும் பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்விக்கு பின், தமிழ்நாட்டில் ராகுல் காந்தி எந்த ரிஸ்கையும் எடுக்க விரும்பவில்லை.
இதனால் திமுக உடனான கூட்டணியை உறுதி செய்யும் வகையில் 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதன்பின் அந்த குழுவினர் முதல்வர் ஸ்டாலினையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இப்படியான சூழலில் பிரவீன் சக்ரவர்த்தி என்ன காரணத்திற்காக தவெக தலைவர் விஜய்யை சந்தித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாக கூறப்பட்ட சூழலில், இந்த சந்திப்பும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஆனால் தமிழக காங்கிரஸ் தரப்பில் இப்படியொரு சந்திப்பு நடந்ததே தங்களுக்கு தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்யை சந்தித்த பிரவீன் சக்ரவர்த்தி மீது காங்கிரஸ் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் தவெகவில் இணைவதற்காக பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மூலமாக நடைபெற்றுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மயிலாடுதுறை எம்பியாக முயற்சித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி தரப்பில் பிரவீன் சக்ரவர்த்திக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.
இதன்பின் பிரவீன் சக்ரவர்த்தி திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையில் சிக்கலை உண்டாக்க முயற்சித்து வருவதாக சில தகவல் வெளியாகியது. இதனால் விரைவில் பிரவீன் சக்ரவர்த்தி மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications