புதுசா இருக்கே.. தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர்.. தவெகவில் உருவான புதிய பதவி.. விவரம் என்ன?
சென்னை: 2017ஆம் ஆண்டு திமுகவில் முதல்முறையாக செயல் தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. அந்த பொறுப்புக்கு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, செயல் தலைவர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டது. திமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியிலும் செயல் தலைவர் என்ற பொறுப்பு இருந்ததில்லை.
தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஏற்கனவே மாநாடு நடத்தப்பட்ட நிலையில், முதலாமாண்டு நிறைவுக்குள் நிர்வாகிகள் நியமனத்தை முடிக்க தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு நாளும் தவெக நிர்வாகிகளை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே 2 கட்ட மாவட்டச் செயலாளர்கள நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை 3ஆம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று விசிக முன்னாள் நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, அதிமுக நிர்வாகி சிடி நிர்மல் குமார் மற்றும் பிரபல யூட்யூபர் ராஜ் மோகன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் பதவியும், சிடி நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பும், ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆதவ் அர்ஜுனாவுக்கு அளிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏனென்றால் இதுவரை அரசியல் கட்சிகளில் தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பு தான் அளிக்கப்படும். அதுவும் தேர்தல் வரும் போது மட்டுமே தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். உதாரணமாக கடந்த முறை வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட்ட போது, காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அதுபோல் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் அந்த பொறுப்பு இருக்காது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல்முறையாக தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு, அந்த இடத்திற்கு ஆதவ் அர்ஜுனா கொண்டு வரப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தேர்தல் வியூக அமைப்பாளராக ஆதவ் அர்ஜுனா பணியாற்றி இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் இருக்கும் நிலையில், தவெக தரப்பில் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தேர்தல் பிரிவு என்று ஒரு புதிய அணி இவரது தலைமையில் உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications