விஜயின் அம்மா கிறிஸ்டியன்.. தனி விமானம் வாங்கிக் கொடுத்த பாஜக! அப்பாவு அதிரடி.. தவெக பதிலடி!
சென்னை: விஜயின் தாயார் சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர் என்பதால் சிறுபான்மை வாக்குகளை பிரிக்க பாஜக விஜயை களத்தில் இறக்கி உள்ளதாக தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார். இந்த நிலையில் பேரவை தலைவராக இல்லாம், அப்பாவு பேச்சு திமுக பேச்சாளர் போலவே இருப்பதாக தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று நெல்லையில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை, தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு விஜய் வீட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனை சரியா தவறா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை எனவும், வருமான வரி சோதனை நடந்தபோது புஸ்ஸி ஆனந்த் அமித்ஷாவிடம் பேசி அதனை சரி செய்ததாக கூறினார்.

மேலும், விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய அருண்ராஜுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜக அமித்ஷா பின்னால் விஜய் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விஜயின் தாயார் கிறிஸ்தவர் என்பதால் சிறுபான்மையினர் வாக்கை பிரிக்க விஜயை பாஜக களமிறக்கி உள்ளது. புஸ்ஸி ஆனந்த் பாண்டிச்சேரியில் விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த போதே அவருக்கு அமித் ஷாவோடு தொடர்புண்டு. ஒய் பிரிவு பாதுகாப்பை விஜய் கேட்காமலேயே கொடுக்கிறார்களே விஜய்க்கு தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான்" என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் பேரவை தலைவராக இல்லாமல், அப்பாவு பேச்சு திமுக பேச்சாளர் போலவே இருப்பதாக தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடுள்ள எக்ஸ் பதிவில்," மாண்புமிகு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு ஐயா அவர்கள், அனைவருக்குமான பேரவைத் தலைவராக இல்லாமல் திமுக பேச்சாளராகவே செயல்படுவது வழக்கம். ஆனால் இன்னும் கீழிறங்கி நம் வெற்றித் தலைவர் விஷயத்தில் பேரலை சேனல் சிறார்கள் போல் கட்டுகதைகளை எல்லாம் சொல்வது தகுமா?
மதிப்புமிகு பேரவைத் தலைவரே.. அந்தத் தனி விமானம் எங்கு நிற்கிறது? துபாய் மெயின் ரோட்டிலா? பரந்தூரிலா? வாட்சப் புரட்டுகளை வாத்தியார் பரப்பலாமா? தனி விமானப் பொய்கள் இருக்கட்டும், தனியார் நிறுவனம் மூலம் பாஜகவிற்கு திமுக பல உதவிகள் செய்வதாகப் பேச்சு அடிபடுகிறதே ஐயா?
சபாநாயகர் அவர்களே.. தாயின் மதம் குறித்தெல்லாம் பேசி, தங்களை திமுக கரை வேட்டி கட்டிய முழு சங்கி என்ற உண்மையை வெளிப்படுத்தலாமா? தாயார் இந்து மதத்தை சார்த்தவர். அப்படி கிறிஸ்தவராகவே இருந்தாலும் கூட அதில் என்ன தவறு? மனிதரை மனிதராகப் பாராமல் கிறிஸ்தவராகப் பிரித்துப் பார்ப்பது சிறுபான்மை விரோதச் சிந்தனை அல்லவா? அன்று துப்பறிவாளர் ஐயா H. ராஜா செய்த வேலையை இன்று மாண்புமிகு சபாநாயகர் செய்வது சரியா?
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்ற திருக்குறளை நினைவூட்டுகிறேன். பேரவையில் மற்றவர்களைப் பேச விடாமல் தடுக்கலாம். மக்கள் சக்தியை உங்களால் ஒரு போதும் தடுக்க முடியாது ஐயா. " என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications