மாணவர்களை அவமானப்படுத்தினேனா.. "அந்த" மாதிரி பெற்றோரையே விமர்சித்தேன்.. வேல்முருகன் புது விளக்கம்!
சென்னை: மாணவர்கள், பெற்றோர் குறித்து தாம் பேசவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார். விஜய் கல்வி விருது விழா குறித்து வேல்முருகன் பேசியது சர்ச்சையான நிலையில், தனது பேச்சு மடைமாற்றம் செய்யப்படுவதாக கூறி இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து 234 தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறார். தொடர்ச்சியாக 3வது ஆண்டாக தவெக சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் கடைசி கட்டமாக இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் 38 தொகுதிகளுக்கான மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார்.

இந்த விருது விழா குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசுகையில், 2 கிராம் தங்கத்திற்காக ஒரு கூத்தாடியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வைக்கின்றனர். இதுதான் தமிழனின் கலாச்சாரமா? ஈனப்பிறவிகள் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். வேல்முருகனின் இந்த பேச்சு சர்ச்சையாகியது.
இதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகள் வேல்முருகனை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் கல்வி விருது விழாவில், மோசமாக விமர்சித்த வேல்முருகனின் பெயரை குறிப்பிடாமல் மாணவர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். தாய்மாமன் உறவு குறித்து தெரியுமா, விஜய் எங்களின் தந்தையை போன்றவர் என்று மாணவிகள் பேசி பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தமிழன் பெரிய பாரம்பரியம் கொண்ட, பண்பாடு கொண்ட இனம் என்று சொல்கிறான். நாறி போய் கிடக்கிறது. வெளிப்படையாக சொன்னான், வெளிப்படையாக சொல்கிறான் என்கிறார்கள். வேல்முருகன் பெண்களை, பெண் பிள்ளைகளை, பெற்றோரை அவமானப்படுத்திவிட்டான் என்கிறார்கள்.
பெற்றோர் என்ற பெயரில் டிக் டாக்கில் விபச்சாரம் செய்கிற பெற்றோரை சொன்னேனே தவிர, தமிழ்நாட்டில் படித்தவர்கள் யாரையும் சொல்லவில்லை. இன்றைய தமிழ்ச் சமூகம் குறித்து நாங்கள் பேசினால், அதனை மடைமாற்றம் செய்கிறார்கள். நாங்கள் பேசுவதை விட, வேறு ஒன்று பேசுபொருளாக மாறுகிறது என்று ஆவேசமாக பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications